அல்லாஹ்வின்பேரருளான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அருளின் முழு வடிவமாகும். அவர்களில் அருள் இல்லாத எதுவுமே இல்லையென்பதை இதுவரை சொல்லப்பட்ட தலைப்புக்களில் காணக் கிடைத்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை நீங்கள் நபியாக ஏற்றிருந்தால் இந்த நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும்.
நபியாக ஏற்றுக் கொண்ட பின்னும் மேற்கூறிய விடயத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் முனாபிக் ஆக இருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பனூ இஸ்ரவேலர்களின் பரம்பரையில் வந்த இயக்கங்களுடன் உங்களுக்கு தொடர்பு இருந்தால் மட்டுமே இது விடயத்தில் உங்களுக்கு மனக்கசப்பு உருவாகும் என்பதையூம் அறிந்து கொள்ளுங்கள்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மண்ணில் பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அருளாக இருந்திருக்கிறார்கள். மண்ணில் வாழும்போது அக்காலத்து மக்களுக்கு அருளாக இருந்துள்ளார்கள். அவ்வாறே மண்ணில் இருந்து மறைந்த பின்னும் அவர்கள் அருள் பொருந்தியவர்கள் என்பதில் ஏகத்துவாதிகளிடத்தில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. எனவே அன்னவர்களின் மண்ணறையும் அருள் பொருந்தியதென்பதில் உண்மையான ஏகத்துவவாதிகள் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறை அருள் பொருந்தியது என்பதற்காகத்தான் அதனைத் தரிசிப்பது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தரும் வணக்கங்களில் விசேடமானதென்று அவ்வருளைப் பெற்றிட்ட அறிஞர்கள் அறிக்கையிட்டனர். ஆயினும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையைத் தரிக்கச் செல்வது பற்றிய பாடத்தில் இஸ்லாமிய ஷரீஅத்தின் சாயலற்ற அசிங்கமான கருத்தை அரங்கேற்றி அசிங்கமடைந்த முதல் நபர் இப்னு தைமிய்யா என்ற ஒரு நபராகும். இதனால் அவர் இன்றும் விமர்சிக்கப்படுகிறார். அஹ்லுஸ் ஷுன்னத் வல்ஜமாஅத்தினரால் அசிங்கப்படுத்தப்படுகிறார். நபிமார் மற்றும் ஸாலிஹான நல்லடியார்களை தரக்குறைவாக யார் பேசினாலும் அவர்களுக்கு சாபக் கேடுதான்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் சிறப்பான மேனியைச் சுமந்துள்ள பூமியைவிடச் சிறந்ததொரு பூமி அகிலங்களில் எங்கும் இல்லை.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையை முதன் முதலில் முத்தமிட்டவர்கள் நபித் தோழர்களாகும். ஹழ்ரத் அபூ அய்யூபுல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அண்ணலாரின் மண்ணறையை முத்தமிட்டவர்களில் ஒருவராகும்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அருமைத் தோழர்கள் மத்தியில் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அப்பொழுது நேரடியாக நாயகத்தின் திருச் சபைக்குச் சென்று நாயகமே மழையைத் தாருங்கள் என்று கூறிய அருமைத் தோழர்கள்தான் மண்ணில் இருந்து மறைந்த பின்னும் பஞ்சம் ஏற்பட்டபோது “நாயகமே உங்கள் சமூகம் அழிகிறது. மழையைத் தாருங்கள்” என்றும் சொன்னார்கள்.
“வா முஹம்மதாஹ்!” மற்றும் “யா முஹம்மத்” என்று கூறி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் நேரடியாக உதவி தேடியவர்கள் அருமைத் தோழர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையின் முகட்டினைத் திறந்து வைத்து அருள் பெறுங்கள் என்று சொன்னது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருமை மனைவி நமது அண்ணை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களே அன்றி வேறு யாருமல்ல.
يا خير من دفنت بالقاع أعظمه
فطاب من طيبهن القاع والأكم
نفسي الفداء لقبر أنت ساكنه
فيه العفاف وفيه الجود والكرم
இது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நல்லடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின் அவ்விடத்திற்கு வருகை தந்த கிராமத்து அரபி ஒருவர் அங்குள்ள மண்ணை தன் தலை மீது அள்ளிக் கொட்டி அழுது புலம்பி மன்னிப்புத் தேடிப் படித்த பாடல் வரிகளாகும்.
இப்பாடல் வரிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையைச் சூழவுள்ள சுவரில் எழுதப்பட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக விளங்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க காலம் வரை அது காணப்பட்டிருந்து. ஆனால் அண்மைக் காலமாக அது பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளங்காத அளவுக்கு நிறம் தீட்டி மறைக்கப்பட்டு வருவது வேதனையான விடயமாகும்.
எனக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ரின் பொருட்டினால் உதவி தேடுவேன் என்று இப்னுல் முன்கதிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறிய தகவலை ஹாபிழ் தஹபி தாரீகுல் இஸ்லாம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையை முத்தமிடலாம், அவ்விடத்தில் தொழலாம்இ அவர்களிடம் நேரடியாக உதவி கோரலாம் என்ற நம்பிக்கை அருமைத் தோழர்கள் காலம் தொட்டு இஸ்லாமிய உம்மத்திடம் இருந்து வருகிற நம்பிக்கையாகும். இது ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகும். இதற்கெதிரான பிரச்சாரம் பித்அத்தாகும். ஆனாலும் தற்காலத்தில் பித்அத்தான ஒன்று ஏகத்துவமாகவும் ஏகத்துவமானதொன்று பித்அத்தானதாகவும் புரண்டு போய் விட்டது. அதனால் கப்ர் வணக்கம் என்று கொச்சைப்படுத்தப்படுமளவுக்கு நிலமை மோசமாகி விட்டது.
இமாமுனா புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தம்முடைய அத்தாரீக் என்ற நூலினை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ரடியில் வைத்து தொகுத்திருந்தார்கள். அவ்வாறே ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீத் கிரந்தத்தின் அறிவிப்பாளர் பட்டியலை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் கப்ருக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட இடத்தில் வைத்து தொகுத்திருக்கிறார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அருளை நாடியே இவ்வாறு இமாம் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
நபிமார்கள் மூலமாக எவ்வாறு அருள் பெற்றிட முடியுமோ அவ்வாறே ஸாலிஹீன்கள் மூலமாகவும் அருள் பெற்றிட முடியும். அந்த வகையில் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் மண்ணறையின் மூலமாக அருள் பெறப்படுவதுபோன்று ஸாலிஹீன்களின் மண்ணறைகள் மூலமாகவும் அருள் பெற முடியூம்.
அந்த வகையில் நபித் தோழர் ஸெய்யிதுனா அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கப்ரின் பரக்கத்தினால் பஞ்ச காலங்களில் அவ்வூர் மக்கள் மழையைப் பெற்றிருக்கிறார்கள். அருளை நாடி பல பகுதிகளில் இருந்து வந்து அவரது கப்ரைத் தரிசித்து சென்றுள்ளனர்.
திருமன வாழ்வில் ஒன்றினையும் இஸ்தன்பூல் நாட்டு முவஹ்ஹிதீன்களான புதுத் தம்பதிகள் நபித் தோழரின் கபுரடிக்கு வந்து அருள் பெற்றுச் செல்லும் பழக்கம் அம்மக்கள் மத்தியில் இருந்ததாக அல்ஹாபிழ் தஹபி குறிப்பிடுகிறார்.
இமாமுனா புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் கப்ரில் இருந்து கஸ்தூரியை விட அழகிய மணம் வீசியிருக்கிறது. அதன் காரணத்தினால் அவ்வூர் மக்கள் இமாம் அவர்களின் கபுரடி மண்ணை அருளுக்காக எடுத்துச் சென்றிருக்கின்றார்கள். இமாம் அவர்களுக்கு எதிரிகளாக காணப்பட்டவர்களெல்லாம் கப்ரடிக்குச் சென்று தவ்பா செய்திருக்கிறார்கள்.
இமாம் அவர்களின் கப்ரின் பரக்கத்தினால் பஞ்ச காலங்களில் மழையைப் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலை இமாம் சுபுகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது “அத்தபகாத்” என்ற நூலில் பதிவிடுகிறார்.
இப்னு பக்கார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ர் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இடம் என்று அறியப்பட்டிருந்தாக இப்னு கல்கான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் “அல்வஃபிய்யாத்” என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.
அல்ஹாபிழ் அபூ அலி அந்நைஸாபூரி அவர்கள் கூறுகிறார்கள். நான் கடுமையான கவலையில் இருந்து கொண்டிருந்த சந்தர்ப்பம் ஒன்றில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைக் கனவில் கண்டேன். யஹ்யா பின் யஹ்யா என்பவரின் கபுரடிக்குச் சென்று பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கேளுங்கள் என்று கூறியதுபோன்று எனக்குத் தெரிந்தது. அதனால் கண் விழித்த நான் எனக்குச் சொன்னதை நிறைவேற்றினேன். எனது தேவைகளும் தீர்க்கப்பட்டது. இத்தகவலை ஹாபிழ் தஹபி “தாரீகுல் இஸ்லாம்” என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.
இமாமுனா இப்னுல் பெஃளரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் கப்ரடியின் பரக்கத்தினால் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மழை பொழியும்.
ஹதீத் கலையில் பிரபலமான இப்னு குஸைமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அலி பின் மூசா ரிழா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரின் மூலமாக அருள் பெற்றிருக்கிறார்கள்.
ஹழ்ரத் மூசா ரிழா நாயகம் அவர்களின் மண்ணறையை நான் பல முறை தரிசித்திருக்கிறேன். எனக்கு ஏதாவது பிரச்சினைகள் கஷ்டங்கள் ஏற்படுமானால் நான் அவ்விடம் சென்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். உடனே அப்பிரச்சினைகள் நீங்கிவிடுவதை நான் நன்கு பரீட்சித்துப் பார்த்திருக்கின்றேன் என அல்ஹாபிழ் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.
இமாம் மூசா ரிழா அவர்களின் மண்ணறையை மக்கள் நாடிச் சென்று தரிசிக்கின்றனர் என்ற தகவலை ஹாபிழ் தஹபீ அவர்களும் தம்முடைய “ஸியர் அஃலாமிந் நுபலா” எனும் நூலில் பதிவிடுகிறார்.
இமாம் தாரகுத்னீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அபுல் ஃபத்ஹ் அல்கவ்வாஸ் என்பவரின் கப்ரின் மூலமாக அருள் பெற்றதாக குறிப்பிடுகிறார்.
அல்லாமா இப்னுல் ஜஸரீ அவர்கள்,“அல்ஹிஸ்னுல் ஹஸீன்” என்ற நூலில் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் இடங்களைக் குறிப்படும் போது அவ்விடங்களில் ஒன்றாக நபிமார் வலிமார்களின் கப்ருகளையும் குறிப்பிடுகிறார்.
ஸெய்யிதா நஃபீஸதுல் மிஸ்ரிய்யா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கப்ரடியில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்று ஹாபிழ் தஹபி குறிப்பிட்டு விட்டு பொதுவாக நபிமார் மற்றும் வலிமார்களின் கப்ரடிகளில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.
இமாமுனா ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருளை நாடி இமாம் அபூ ஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரைத் தரிசித்திருக்கிறார்கள். தனது தேவைகள் நிறைவேற அவ்விடத்தில் வைத்து அல்லாஹ்விடம் துஆ செய்திருக்கிறார்கள். குறுகிய நேரத்திற்குள் அந்த தேவை நிறைவேறியும் இருந்திருக்கிறதென்று கூறப்பட்ட இமாம் அவர்களின் கூற்று “தாரீக் பக்தாத்” என்ற நூலில் பதிவாகியுள்ளது.
ஹன்பலீ மத்ஹபின் பிரபல அறிஞர்களில் ஒருவரான அபு அலி அல்கலால் அவர்கள் தனது அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற இமாம் மூசா காழிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ருக்கு சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்து நிறைவேற்றிக் கொண்டதாக கூறிய தகவலும் மேற்சொன்ன நூலில் பதிவாகியூள்ளது.
மஃரூபுல் கர்கீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கபுர் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஓர் இடமென்பது மிகப் பிரபலமானதொரு தகவலாகும்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரை தொட்டு தடாவி நோய் நிவாரணம் பெற்றதாக அல்ஹாபிழ் அபூ முஹம்மத் அப்துல் கனீ பின் அப்துல் வாஹித் பின் அலி அல்முகத்திஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அஷ்ஷெய்கு அபுல் அலி பின் முஹம்மத் பஷ்ஷார் ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் கப்ர் அருள் பெறப்படும் இடம் என்பது பிரபலமான தகவலாகும் என தாரீக் பக்தாத், தபகாதுல் ஹனாபிலா, அல் மக்ஸிதுல் அர்ஷத், அல் முன்தழம் ஃபீ தாரிகில் முலூகி வல் உமம் போன்ற நூட்களில் பதிவாகியுள்ளது.
அஷ்ஷெய்கு அஹ்மத் அல் கஸ்வீனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ர் அருள் பெறும் நோக்கில் தரிசிக்கப்படுவதாக இப்னுல் ஜௌஸி குறிப்பிடுகிறார்.
அஷ்ஷெய்கு இப்னு அபீ அந்நுமைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரடியில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதாக இப்னுல் அதீம் என்பவர் “புக்யதுத் தலப் ஃபீ தாரீகி ஹலப்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
இதுபோன்ற இன்னும் பல தகவல்கள் “அல்பரகது வத்தபர்ருக்” என்ற நூலில் திரட்டப்பட்டிருக்கிறது. கட்டுரையின் நலன் கருதி இத்தோடு நின்று விட்டேன்.
இமாமுனா ஷாபிஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆடையினை கழுவி எடுத்து அதன் நீரை அருளை நாடி இமாமுனா அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் அருந்தியுள்ளார்கள். இது உம்ததுல் காரியில் பதிவாகியுள்ளது.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்த ஆடையினை கழுவிய நீரை நோயாளர்களுக்கு மருந்தாகப் பாவித்து நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற்றது போன்று ஸாலிஹீன்களின் ஆடைகளையும் அருள் பெறும் நோக்கத்தில் கழுவிக் குடிக்க முடியும் என இமாமுனா நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி முஸ்லிமுடைய விரிவுரையில் பதிவிடுகிறார்கள்.
இமாம் அஹ்மதுடைய ஆடையினை இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அருள் பெறும் நோக்கில் கழுவி அருந்தியதாக தபகாதுஷ் ஷாபியிய்யா அல் குப்ரா என்ற நூலில் பதிவாகியுள்ளது.
இமாம் அஹ்மத் அவர்களின் ஆடையினை அருளை நாடி அவரது பிள்ளைகள் அணிந்துள்ளதாக மனாகிபுல் இமாமி அஹ்மத என்ற நூல் குறிப்பிடுகிறது.
ஹஜருல் அஸ்வத் கல்லினை முத்திடலாம் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் கௌரவமான அனைத்து வஸ்துக்களையூம் முத்தமிடலாம். எனது பாட்டனார் அல்குர்ஆனை முத்தமிட்டுள்ளார். நபி மொழிகளை முத்தமிட்டுள்ளார் அவ்வாறே ஸாலிஹீன்களின் கப்ருகளையும் முத்தமிட்டுள்ளதாக இமாமுனா தபரி கூறிய கருத்தும் உம்ததுல் காரியில் பதிவாகியுள்ளது.
எவர் மூலமாக அருள் பெறலாம் என்று கருதப்படுகிறதோ அவ்வாறானவரின் கப்ரைத் தொட்டும் அருள் பெற முடியும் என்று “காயத்துல் முன்தஹா” என்ற நூலாசிரியர் கூறுகிறார். இவர் ஹன்பலீ மத்ஹபை சார்ந்ததொரு அறிஞராகும்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் அறையை முத்தமிடலாம் என்று கஷ்ஃபுல் கினாயி அன் மத்னில் இக்னாயி என்ற நூலில் பதிவாகியுள்ளது. இதன் ஆசிரியரும் ஹன்பலி மத்ஹபை சார்ந்தவராகும்.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அணிந்த ஆடையில் தான் கபனிடப்பட வேண்டும் என்பதற்காக அதனைக் கேட்டுப் பெற்றுக் கொண்ட அருமைத் தோழர் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராகும் என அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி என்ற நூலின் 16 ஆம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடி ஒன்று நபித் தோழர் ஸெய்யிதுனா அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்திருக்கிறது. நான் மரணித்து விட்டால் எனது நாக்கின் கீழே அதனை வைத்து என்னை நல்லடக்கம் செய்யுங்கள் என்று தாபிதுல் புனானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வஸிய்யத் செய்துள்ளார்கள். அவ்வாறே நல்லடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின் அவரது பரிசுத்த உடல் அழியாது. அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படாது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்திருந்தாக அஸ்ராருல் ஆதாரிந் நபவிய்யதி என்ற நூலின் 24 ஆம் பக்கத்தில் பதிவாகியூள்ளது.
ஸல்லலாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் வியர்வைகள் தனது கபன் ஆடையில் பூசுமாறும் தோழர் அவர்கள் வஸிய்யத் செய்ததாக புகாரியில் பதிவாகியுள்ளது.
இமாம்களான புகாரி மற்றும் அஹ்மத் போன்றவர்கள் தங்களது ஆடைகளினுள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திரு முடியை வைத்துத் தைத்து அவ் ஆடையினை மௌத்து வரை அணிந்து வந்திருக்கிறார்கள். இது நபித் தோழர் காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் காண்பித்துக் கொடுத்த ஒரு ஷுன்னத்தாகும்.
நபியூல்லாஹ் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணமான பின்னர் அவரின் மூலமாக அருளை நாடி ஒவ்வொரு பிரதேச வாசிகளும் தங்களது பிரதேசத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டதாக தப்சீருல் காஸினில் பதிவாகியுள்ளது.
ஸாலிஹீன்களின் கப்ருகள் மூலமாக மக்கள் காலம் காலமாக அருள் பெற்று வருகிறார்கள் என்றதொரு தகவலை இமாம் ராஹுனி அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் மரணிக்கும் முன் அவர் மூலமாக அருள் பெறப்பட்டடிருந்தால் அவர்மரணமான பின்னரும் அவர் மூலமாக அருள் பெறலாம் என்று இமாமுனா கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்று அல்ஃபஜ்ருஸ் ஸாதிக் என்ற நூலில் பதிவாகியுள்ளது.
இமாம் ஷம்சுத்தீன் முஹம்மத் அல்ஜஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்ரைத் தரிசித்திருக்கிறார். அருள் பெறும் நோக்கில் அவ்விடத்தில் ஹதீத்களை வாசித்திருக்கிறார். அவ்விடத்தில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் கண்டிருக்கிறார்.
கப்ருகள் மூலமாக அருள் பெறுதல் என்ற இத்தலைப்பில் இதுவரை அரபுலகில் வாழ்ந்து மறைந்த ஸாலிஹீன்களில் ஒரு சிலரைக் குறிப்பிட்டோம். அது தவிர இந்தியா மற்றும் இலங்கை போன்ற தேசங்களில் இதற்கான சான்றுகள் சொல்லி முடிக்க இயலாத அளவுக்கு இத்தலைப்புக்குப் பொருத்தமான நிகழ்வுகள் பதிவாகியிருப்பதைக் காண முடிகிறது. இருப்பினும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இடம் பெற்றதாக அப்பரதேச வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ள ஒரு சில தகவல்களை இவ்விடத்தில் பதிவு செய்வது நல்லதென்று கருதுகின்றொம்.
அந்த வகையில்இ மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான ஹழ்ரத் முஜத்தித் அல்ஃபுஸ் ஸானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஹ் வலியுல்லாஹ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
முஜத்தித் அல்ஃபுஸ் ஸானி அவர்கள் வலிமார்களின் தர்காக்களைத் தரிசிக்கச் சென்றால் அங்கே நீண்ட நேரம் முராகபாவில் மூழ்கிப்போய் இருப்பது அவரின் வாடிக்கையாக இருந்துள்ளது. கவ்துல் அஃழம் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை கராமத்தின் அடிப்படையில் தரிசித்து அவர்களின் இரு பாதங்களையும் முத்தமிட்டு அருள் பெற்றிருப்பது இவரின் பிரபல அற்புதங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.
ஷாஹ் வலிய்யூல்லாஹ் அவர்களின் தந்தை அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் நாயகம் அவர்களின் நலன் விசாரிக்க அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அச்சந்தர்ப்பத்தில் தங்களது அருள் நிறைந்த இரு முடிகளை வழங்கியிருக்கிறார்கள். அவ்விரண்டும் ஒட்டியே காணப்படும். ஸலவாத் ஓதினால் இரண்டும் பிரிந்து விடும். அவ்விரண்டில் ஒன்றை என்னிடம் தந்தார்கள் என்று அஷ்ஷாஹ் வலிய்யுல்லாஹ் “அன்ஃபாசுல் ஆரிபீன்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
அஷ்ஷாஹ் அப்துர் ரஹீம் அவர்கள், சுல்தான் நிழாமுத்தீன் அவ்லியாவின் தர்காவுக்குச் சென்றால் முராகபாவில் நீண்ட நேரம் இருப்பார்கள். ஹழ்ரத் நிழாமுத்தீன் அவ்லியாவுடன் உரையாடுவார்கள். சந்தேகங்கள் ஏதாவது இருப்பின் அவற்றுக்கான தெளிவை பெற்றுக்கொள்வார்கள் என்ற தகவலை மௌலவி அஷ்ரப் அலி தானவீ தனது “பஷன்தீதா வாக்கிஆ” என்ற தனது நூலில் பதிவிடுகிறார்
மௌலானா ஸகரிய்யா ஸாஹிபின் குருவான மௌலானா கலீல் அஹ்மத் தனது கலீபாக்களுடன் அஜ்மீர் ஷரீப் சென்று காஜா கரீப் நவாஸின் தர்காவைத் தரிசித்து வரும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளதாகச் சொல்லப்படும் தகவல் “தத்கிரதுல் கலீல்” என்ற நூலில் பதிவாகியுள்ளது.
மௌலவி ரஷீத் அஹ்மத் கொன்கோயிடம் பைஅத் செய்து கொள்ளுங்கள் என ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரிக்கு உத்தரவிட்டவர் கல்யரீ ஷரீபில் அடக்கம் செய்யப்பட்ட ஸாபிர் பியா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாகும். உத்தரவிடட்டவர் ஹிஜ்ரி 690 லும் உத்தரவிடப்பட்டவர் 1919 லும் இறையடி சேர்ந்தவர்களாகும்.
மௌலவி காசிம் நாநூத்தவி என்பவர் மரணித்த பின்னும் அவரது அரப் கல்லூரிக்கு வந்து சென்றிருக்கிறார். பிறர்களுக்கு உதவியுள்ளார்.
மௌலவி அஷ்ரப் அலி தானவீ, பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் சமாதி கொண்டுள்ள தாதா கன்ஞ் பக்ஸ் நாயகத்தின் தர்காவுக்கு சென்று அருள் பெற்ற ஒருவராகும். தர்காவில் ஆயிரக்கணக்கான வானவர்கள் வந்து செல்வதை நான் கண்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். பார்க்க: ஆலம் பர்ஸக் - மௌலவி காரி முஹம்மத் தய்யிப்.
இவ்வாறு இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட இறை நேசர்களின் கப்ருகளில் இருந்து அருள் பெற்றதாகக் குறிப்பிட்ட சம்பங்கள் யாவும் தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர்களால் அங்கீகரிக்கப்பட்ட நல்லடியார்களின் சம்பவங்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும். தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் காந்தலவீ, இரவு நேரங்களில் தனிமையில் மணித்தியாலக்கணக்கில் அஷ்ஷெய்கு அப்துல் குத்தூஸ் நாயகத்தின் தர்காவில் முராகபாவில் இருந்திருக்கிறார். அங்கிருந்து அருள்களைப் பெற்றிருக்கிறார்.
தொடருகம்...........