வியாழன், 27 பிப்ரவரி, 2020

முதல் மனிதரின் மதம்,உருவ வழிபாட்டின் தொடக்க வரலாறு,முதல் இறைத் தூதுவர் இறைத் தூதுவர், முதல் இறைத்தூதுவர் வாழ்ந்த பூமி,முதல் நபிக்கும் முதல் இறைத் தூதுவருக்குமிடைப்பட்ட காலம்


முதல் மனிதரின் மதம்


மனிதர்கள் (யாவரும்) ஒரே வர்க்கமாக இருந்தனர். அப்பால் (அவர்களுக்குள் வேறுபட்டுப் பிரியவே விசுவாசிகளுக்குச்) சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுபவர்களாகவும் அச்சமூட்டுபவர்களாகவும் (அவர்களுக்கிடையே) நபிமார்களை அல்லாஹ் அனுப்பி, அவர்கள் எவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அவ்விஷயத்தில் அவர்களுக்கிடையில் தீர்ப்புக் கூறுவதற்காக, அவர்களுடன் சத்தியத்தைக் கொண்டுள்ள வேதத்தையும் இறக்கினான்.” (சூரத்துல் பகரா வசனம் 213)

ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இருந்து ஹழ்ரத் நபிய்யுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காலம் வரை மனிதர்கள் எல்லோரும் அல்லாஹ்வை விசுவாங் கொண்ட முஸ்லிம்களாக இருந்தனர்.

உருவ வழிபாட்டின் தொடக்க வரலாறு


முதல் மனிதர் ஆதமும் அவர் பிள்ளைகளும்  அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். பல தெய்வ நம்பிக்கை அப்போது இருக்கவில்லை. சிலை வணக்கமும் இருக்கவில்லை. ஆதம் நபியின் போதனைகளைப் பின்பற்றி வந்த மக்கள் மத்தியில் ஐந்து பெரியார்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் இறைவழிபாடும் பயபக்தியும் தூய வாழ்வும் எல்லோரையும் கவர்ந்தன. அவர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்தன. அந்தப் பெரியார்கள் மீது மக்கள் அனைவரும் அதிக அன்பு  செலுத்தினார்கள்.வத்து, சுவா, யகூஸ், யஊக், நஸ்ர்" ஆகியவைதான் அப்பெரியார்களின்        அழகுப்பெயர்கள்.

காலங்கள் கடந்தன. அந்த ஐந்து பெரியார்களுக்கும் மரணம் வந்தது. அப்பொழுது அவர்கள் மீது அன்பு வைத்திருந்த மக்களுக்குப் பெரும் அதிர்ச்சி! கடுமையான துக்கமும் துயரமும் அவர்கள் அனைவரையும் ஆட்கொண்டது! அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்: கண்மூடி மண் மூடிப்போன நம் பெரியார்களை நாமும் மறந்து விடுவதா? அது கூடாது. என்றென்றும் அவர்களின் நினைவு நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன      செய்ய வேண்டும் என்று அந்த  மக்கள் சிந்தித்தார்கள். அத்தகைய சிந்தனையின் விளைவாகவே அந்தப் பெரியார்களுக்கு  உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டன. ஆம், அப்பெரியார்களை நினைவு கூர வேண்டும் என்பதற்காக அவர்களின் உருவங்களுக்குச் சிலைகள்          வடிக்கப்பட்டன!

மிகமிக அழகிய தோற்றத்திலும் அளவான வடிவத்திலும் உருவாக்கப்பட்ட அந்தச் சின்னச் சின்னச் சிலைகளைப் பார்த்துப் பார்த்து மக்கள் எல்லாம் மன ஆறுதல் அடைந்தனர். ஆனந்தம் கொண்டனர். இந்த நிலை பலகாலம் நீடித்தது. பெரியார்களுக்குச் சிலைகள் செய்த அனைத்து மக்களையும் மரணம் வந்து அழைத்துக் கொண்டது. அவர்களின் சந்ததிகள் வந்தார்கள். அதற்கும் பிறகு மூன்றாவது நான்காவது தலை முறையினர் தலையெடுத்தார்கள்!

பிற்காலத்தில் தோன்றிய அந்த மக்கள், தங்கள் கண்ணெதிரே நின்று கொண்டிருந்த கற்சிலைகளைக் கண்டார்கள்; இந்தச் சிலைகளை எதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள்? இவற்றிற்கும் நமக்கும் என்ன தொடர்பு? நாம் என்ன செய்ய வேண்டும்?-எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. எதையும் அறியாதவர்களாய் அவர்கள் இருந்தார்கள்.

மனிதனின் மிகப் பெரும் விரோதியாகிய இப்லீஸ், மக்களின் இந்த அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டான். ஏக இறைவனாகிய அல்லாஹ்வை வணங்கி வழிபட விடாமல் மக்களைத் திசை திருப்புவதற்காக திட்டம் தீட்டினான். இப்லீஸ் மக்களிடம் வந்தான். இந்தச் சிலைகள்தான் கடவுள்கள். இவற்றையே வணங்க வேண்டும். நோய்நொடிகள் குணம் அடைந்து உடல் நலம் பெறவும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் சூழ்ந்திடவும் இந்தச் சிலைகளையே நாடி வர வேண்டும்., இவற்றிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நச்சுக் கருத்துகளை நயமாக எடுத்துச் சொன்னான். அறியாமையில் மூழ்கிக் கிடந்த அந்தமக்களும் அவற்றை அப்படியே நம்பினார்கள்!

இவ்வாறாக அந்த மக்களிடம் இருந்து மெல்லமெல்ல இறை வழிபாடு விடைபெற்றது., சிலை வழிபாடு பரவியது! ஆம், அன்றைய மக்களின் வாழ்வில் சத்தியம் நீர்த்துப்போனது. அசத்தியமே எல்லா          விதமான பொய் அலங்காரங்களுடனும் பவனி வந்தது! தெளிந்த நீரோடை போல் அமைதியாகச் சென்று கொண்டிருந்த மனித வாழ்க்கையில் தீராத சிக்கல்கள் சீக்கிரமாக வந்து சூழ்ந்து கொண்டன! இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக முதன் முதலாக தனது இறைத் தூதுவரை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

முதல் இறைத் தூதுவர்

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு முதல் தூதர் ஆவீர்.”  நூல்: புகாரி

மக்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், “நூஹே! நீங்கள் பூமிக்கு முதல் ரசூல் ஆவீர்கள்என்றும் கூறுவார்கள். நூல்: முஸ்லிம்

நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவீர்.”  நூல்: புகாரி

முதல் இறைத்தூதுவர் வாழ்ந்த பூமி

முதல் மனிதர் ஆதி பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்புவியில் வாழ்ந்து மறைந்த பிரதேசத்திற்கும் இலங்கைக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது. ஆதம் மலை, ஆதம் பாலம் என்பன இந்தியா மற்றும் இலங்கையில்தான் இருப்பதாக இன்று வரை பேசப்படுகிறது. அவ்வாறே முதல் ரசூலான நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் உருவான வெள்ளப் பிரளயத்திற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க முடியாதுள்ளது.


நபிய்யுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த சகலருக்குமான இறைத் தூதுவர் ஆகும். சுமார் 950 ஆண்டுகள் அவரது மார்க்கப் பணி இடம் பெற்றிருக்கிறது. 80 பேர் மட்டும்தான் பிரளயம் ஏற்பட்டபோது இஸ்லாமியர்களாக இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒரு மகன் உட்பட சகலரும் இறை மறுப்பாளர்களாகவே காணப்பட்டனர். அவர்கள் சகலரும் வெள்ளப் பிரளயத்தில் மாண்டு போனார்கள். வெள்ளப் பிரளயத்தின் பின் 80 பேர் மட்டுமே பூமியில் வாழ ஆரம்பிக்கிறார்கள்.

வெள்ளப் பிரளயத்தின் தொடக்கம்தன்னூர் கொதிப்பதாகும்என்று சூரதுல் ஹூத் அத்தியாயத்தின் 40 ஆம் வசனம் கூறிக் கொண்டிருக்கிறது. தன்னூரில் இருந்து தண்ணீர் கொப்பளித்தால், நீங்களும் உங்களை விசுவாசித்தவர்களும் கப்பலில் ஏறிக் கொள்ள வேண்டும் என ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்திருந்தான்.

தன்னூர்என்றால் என்ன? எனும் கேள்விக்கு கூறப்பட்ட பதில்களில் ஒன்று, அது ஓர் ஊரின் பெயராகும். அந்த ஊர் இந்தியாவில் இருக்கிறது என்பதாகும். தன்னூர் இந்தியாவில் உள்ளதென்பது ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தாகும்.

இந்தியாவின் இரயில்வே அட்டவணையைப் பார்ப்போமானால் அதில் கேரளாவிலுள்ள தானூர் (Tanur) என்னும் ஒரு இடத்தைக் காணலாம். இதே போல வரைபடத்தைப் பார்க்கும் போது கேரளாவில் மலப்புரம் என்னும் மாவட்டத்திலுள்ள கடலோரத்தில் இந்தத்தானூர்என்னும் ஊர் இருக்கின்றது. இது இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ளது. அத்துடன் இது அரபிக் கடலிலிருந்து தனியாக இருக்கின்றது.

முதல் நபி, முதல் மனிதர் ஆதம் அவர்களுடைய இவ்வுலக வாழ்க்கைப் பயணத்திலும், முதல் ரசூல் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை சரிதையிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறதென்ற கருத்தை ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது விசேட அம்சமாகும்.

முதல் மனிதர் போதித்த கொள்கை கோட்பாடும் முதல் இறைத் தூதுவர் போதித்த கொள்கை கோட்பாடும் ஒன்றுதான். அதுதான் ஓரிறைக் கொள்கையாகும். அதற்குப் பெயர்தான் இஸ்லாம். இதைத்தான் இறைத்தூதுவர்களான மூசா, ஈஸா அலைஹிமஸ்ஸலாம் உட்பட சகல இறைத் தூதுவர்களும் போதித்தார்கள். இதையே இறைத் தூதுவர்களில் இறுதியானவரான எமது நாயகம் முஹம்மத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் போதித்தார்கள்.

எனவே, இஸ்லாம் மதம், முதல் மனிதர் பிரகடனம் செய்த யதார்த்தமான உண்மையான கொள்கைக் கோட்பாடே தவிர, அது இன்றைய சவூதி அரேபியாவில் 1400 ஆண்டுகளுக்கு முன் உருவான புதிய கொள்கை கோட்பாடு அல்ல.

முதல் நபிக்கும் முதல் இறைத் தூதுவருக்குமிடைப்பட்ட காலம்

அல்லாஹ்வின் தூதரே! ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபியாக இருந்தார்களா? என ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அதற்கு நபியவர்கள் ஆம்! அவர் (அல்லாஹ்வுடன்) நேரடியாக உரையாடியவர் என்று குறிப்பிட்டார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் எத்தனை ஆண்டுகள் இடைவெளி?” என்று அந்த மனிதர் மேலும் கேட்டார். அதற்கு நபியவர்கள் பத்து தலைமுறைகள் என்று கூறினார்கள். நூல் : இப்னு ஹிப்பான், அல்-பிதாயா வந்நிஹாயா

ஆதம், நூஹ் ஆகிய இவ்விரு நபிமார்களுக்குமிடைப்பட்ட காலம் 10 நூற்றாண்டுகளாகும். இக்காலப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் சகலரும் உருவ வழிபாடு அற்ற ஓரிறைக் கொள்கையில்தான் வாழ்ந்துள்ளார்கள். இவ்வாறு ஓரிறைவனை வணங்கி வழிபட்டு வரும் காலப் பகுதியில் மேற் சொன்னது போல் அவர்கள் மத்தியில் உருவ வழிபாடு தொடக்கம் பெறுகிறது. காலப் போக்கில் அது முழு மனித சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. அதனால் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

இது ஒன்றுதான் ஓரிறைவனை வணங்க மறுத்த காரணத்திற்காக முழு மனித இனமும் தண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறு. இதன் பின்னர் இணைந்திருந்த இந்தியாவும் இலங்கையும் பிரிகிறது. இந்தியாவும் இலங்கைக்குமான தரை வழிப் பாதை (ஆதம் பாலம்) மூடி மறைகிறது. அதில் உருவ வழிபாட்டுக்காரர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு மீண்டும் ஓறிரைக் கொள்கை பூமியில் தளர, வளரத் தொடங்கியது.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் பத்து தலைமுறைகள். இதற்குள் சிலை வணக்கம் தோன்றிவிட்டது. அது எவ்வாறு தோன்றியதென்ற விவரத்தைப் படித்தீர்கள். அதாவது அல்லாஹ்வின் நல்லடியார்களிற் சிலர் மரணித்த பின்னர் அவர்களை நினைவுபடுத்துவதற்காக அவர்களின் உருவங்களை சிலைகளாக வடிவமைத்து நினைவுச் சின்னங்களாக்கி  அவர்களின் வீடுகளில் வைத்துக் கொண்டு நினைவுபடுத்திக் கொண்டு வந்தனர். சில காலத்தின் பின்னர் வீடுகளில் இருந்த உருவச் சிலைகளை அவர்களின் இறை இல்லத்தில் ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு அவற்றை வணங்காமல் அல்லாஹ் ஒருவனை வணங்கி வந்தனர். பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அவ்வுருவங்களைக் கடவுள்களாக ஆக்கிக் கொண்டனர். இவர்களுக்கான இறைத் தூதுவர் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்.

தொடரும்.....

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...