“யா அல்லாஹ் எனது உள்ளம், நாவு, கேள்வி, பார்வை, வலது, இடது, மேலும், கீழும், முன்னும் பின்னும் என அனைத்திலும் நூரை ஏற்படுத்துவதுடன் எனக்கும் நூரைத் தருவாயாக” என ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்.)
அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பஷராகவும் நூராகவும் இருக்கின்றார்கள். இந்தரெண்டில் எந்தவொன்றையும் மறுக்கவோ மறைக்கவோ கூடாது. அவ்வாறு மறுப்பவன் அல்லது மறைப்பவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அத்துடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் நூரைத்தான் அல்லாஹ் முதன்மையாகப் படைத்தான் என்பதை மறுக்கும் ஒருவர் தெளிவான தூய்மையான (சூபித்துவ) அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையுடையவராக இருக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவுத் தாவரங்கள் முதல், பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறிருந்தும் தாவரம் முதல் மனிதன் வரை எதிலுமே பஞ்சபூதங்கள் இருப்பது மனிதனின் சாதாரண புறப்பார்வைக்குப் புலப்படுவதாகத் தெரியவில்லை. அதற்காக மேற்கூறிய கூறுகள் மனிதனில் இல்லையென்று கூறிவிட முடியாது.
மின்சாரத்தினூடாக கிடைக்கப்பெறுகின்ற ஒளியின் உற்பத்திற்கு பஞ்சபூதங்களின் பங்ககளிப்பு இருப்பதாக மனிதன் சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த ஒளியிலும் பஞ்சபூதங்களைப் பார்க்கமுடியாதவனாக அவன் இருக்கின்றான். அவ்வாறே சூரியனும் சந்திரனும் நமக்கு ஒளியைத் தருகிறது. அதன் ஒளிகளை மனிதனானவன் பார்த்துக்கொண்டும் அனுவவித்துக்கொண்டும் இருக்கின்றான். ஆனாலும்கூட அவ்விரண்டும் என்னென்ன கூறுகளின் கூட்டுக்களினால் அவை ஆனதென்பதை அவன் அறியாதிருக்கும்போது புலன்களுக்குப் புலப்படாததொரு ஒளியினை என்னவென்று வர்ணிப்பது?. அல்லது சாதாரண புலன்களுக்குப் புலப்படவில்லையே என்ற காரணத்திற்காக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நூரில்லை என்று சொல்ல முற்படுவது எவ்வாறு?
மனிதனில் கலந்துள்ளதாகச் சொல்லப்படுகின்ற பஞ்சபூதங்களின் அளவுகளும் சந்திரனில் என்னென்ன பஞ்சபூதங்கள் இருக்கின்றன என்பதும் கடுமையான தேடலுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
(“நூர்”என்பதன்பொருள் )தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக