செவ்வாய், 5 நவம்பர், 2019

ஒரே இஹ்ராத்தில் பல உம்ராக்கள் செய்ய முடியூமா?மரணித்தவருக்காக ஹஜ் மற்றும் உம்ரா.இஹ்ராமில் நுழைவதற்கான (மீகாத்) எல்லைகள்.யூதனாக அல்லது கிறிஸ்தவனாக மரணிக்கட்டும்.

ஒரே இஹ்ராத்தில் பல உம்ராக்கள் செய்ய முடியுமா?


ஒரே நாளில் பல உம்ராக்கள் செய்வதாக இருப்பினும் ஒவ்வொரு உம்ரா வுக்கும் தனித்தனியாக மீகாத்துக்குச் சென்று “இஹ்ராம்” அணிய வேண்டும். தனித்தனியாக “தவாஃப், ஸயீ” என்பனவும் செய்யவும் வேண்டும். உதார ணமாக மக்காவில் தொழில் புரியும் ஒருவர் உம்ரா செய்வதாக இருப்பின் அவர் அருகிலுள்ள “மீகாத்து” க்குச் சென்று நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும். பின்னர் ஏழு விடுத்தங்கள் புனித கஃபாவை வலம் வர வேண்டும். பின்னர்ஏழு விடுத்தங்கள் ஸபாஇ மர்வா இடையில் ஓட வேண்டும். தலை முடி களைய வேண்டும். இது ஒரு உம்ராவுக்கான செயல் முறையாகும். 

இவ்வாறு ஒரு உம்ரா செய்து முடித்தவர் இரண்டாவது தடவையாக மீண்டும் உம்ரா செய்ய விரும்பினால் முதல் தடவையில் எவ்வாறு நடந்து கொண்டாரோ அவ்வாறே இரண்டாம் தடவையும் செய்து கொள்ள வேண்டும். எனவே ஒரு தடவை நிய்யத்தோடு அணிந்த இஹ்ராம் ஆடையுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் மற்றும் உம்ராக்களை நிறைவேற்ற முடியாது. 

மரணித்தவருக்காக ஹஜ் மற்றும் உம்ரா.


“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வருகை தந்த பெண் ஒருவர் யா ரசூலல்லாஹ்! ஹஜ் கடமையினை நிறைவேற்றாது மரணித்த எனது தாயாருக்காக நான் ஹஜ் செய்து கொள்ளட்டுமா? என்று கேட்டார். அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஆம். நீங்கள் அவருக்காக ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்கள்.” (முஸ்லிம்)

“கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹஜ் அல்லாஹ்வின் அடியார்கள் மீதுள்ள அவனது கடமையாக இருக்கிறது. எனது தந்தை வாகனத்தில் அமர முடியாதளவு வயோதிபராக இருக்கிறார். ஆகையால் நான் அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றலாமா? எனக் கேட்டார். ஆம். அவருக்காக நீங்கள் ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்.” (புகாரி முஸ்லிம்.)

“ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து எனது சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்
. அதற்கு முன் அவர் மரணித்துவிட்டார் என்று கூறினார். அவள் மீது கடன் இருப்பின் நிறைவேற்றுவீர்தானே! என்று அவரிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கேட்க ஆம்என்றார். அப்படியானால் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அவன் நிறைவேற்ற மிகத் தகுதியானவன் என்று விடை பகர்ந்தார்கள்.” (புகாரி)

எனவே மரணித்த உறவுகளுக்காக ஹஜ் மற்றும் உம்ராக் கடமைகளை நிறைவேற்ற முடியும். அதன் பலனை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

பிறருக்காக ஹஜ்.


ஒருவர் தனது பெற்றோருக்காக அல்லது உறவினர்களுக்காக ஹஜ் செய் வதாக இருப்பின் முதலாவதாக அவர் தனக்குரிய ஹஜ்ஜை நிறை வேற்றி யிருக்க வேண்டும்.

“ஒருவர் "லப்பைக் அன் ஷஷுப்ருமா"- இது ஷுப்ருமா என்பவருக்கான ஹஜ் எனக் கூறியபோது யார் அந்த ஷுப்ருமா என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வினவியதற்கு அவர் எனது சகோதரர் அல்லது எனது உறவினர் என்று அவர் பதில் கூறினார். நீங்கள் உங்களுக்காக ஹஜ் செய்துவிட்டீர்களா? என்று கேட்டார்கள். இல்லை என்றதும் முதலில் (உங்களுக்காக) ஹஜ் செய்து கொள்ளுங்கள். பின்வரும் காலங்களில் ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்து கொள்ளுங்கள் என்றார்கள்.” (அபூ தாவூத்)

யூதனாக அல்லது கிறிஸ்தவனாக மரணிக்கட்டும்.


புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்குப் போதுமான வசதியும் வாய்ப்பும் பெற்றுக்கொண்ட ஒருவர் அக்கடமையினை நிறைவேற்றாது மரணிப்பாராக இருந்தால் அவர் பாவியாக மரணிப்பார். 

“அல்லாஹ்வின் வீட்டுக்குச் செல்வதற்குப் போதிய பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் சீரான போக்குவரத்தும் பெற்றிட்ட ஒருவர் ஹஜ் செய்யாமல் மரணிப்பாராயில் யூதனாக அல்லது கிறிஸ்தவனாக மரணிப்பதில் தப்பில்லை” என்றார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள். 

ஹஜ், உம்ராக்களுக்கான காலங்கள்.


ஹஜ்ஜுக்கான காலங்களாக ஷவ்வால், துல்கஅதா, துல் ஹிஜ்ஜா ஆகிய மாதங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஒருவர் ஹஜ்ஜுக்காக ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை முதல் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை எட்டு வரை ஹஜ்ஜுக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியும். அதே வேளை உம்ராவினை நிறைவேற்றிட கால நிர்ணயம் கிடையாது.

இஹ்ராமில் நுழைவதற்கான (மீகாத்) எல்லைகள்.


ஹஜ் மற்றும் உம்ரா கடமையினை நிறைவேற்றுவதாக இருந்தால் அதற்காக இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினால் எல்லைகள் வறையறுக்கப்பட்டுள்ளன. ஹஜ், மற்றும் உம்ராவுக்காக பயணம் செய்து அவற்றைக் கடந்து செல்வோர் இஹ்ராம் இல்லாது அந்த எல்லைகளைக் கடந்து செல்லக்கூடாதென்று உத்தரவிடப்பட்டிருக்கின்றார்கள். அதையும் மீறி ஒருவர் செல்வாராயின் இஹ்ராம் அணிந்து செல்லாத குற்றத்திற்காக அவர் “ஃபித்யா” எனப்படும் குற்ரப்பரிகாரம் நிறைவேற்றுவது அவசியமாகும்.

மதீனா முனவ்வரா வழியாகச் செல்வோர் “துல்ஹுலைபா” விலிருந்தும், எகிப்து, ஜோர்தான் போன்ற நாடுகளில் இருந்து ஜித்தா வழியாக செல்வோர் “ஜுஹ்பா” தற்போதய “ராபிஹ்” எல்லையில் இருந்தும் எமன் மற்றும் அதன் வழியாக வருவோர் “எலம்லம்” தற்போதய “ஸஃதிய்யா” எல்லையில் இருந்தும், தாயிப் வழியாக வருவோர் தாயிபிலுள்ள “அஸ்ஸைலுல் கபீர்” என்றழைக்கப்படும் “கர்னுல் மனாஸில்” எல்லையில் இருந்தும் இராக்கில் இருந்து வருவோர் “தாது இர்க்” தற்போதைய “ழரீபா” எல்லையில் இருந்தும் ஹஜ் அல்லது உம்ராவிற்கான “நிய்யத்” செய்து “இஹ்ராம்” ஆடை அணிந்து செல்ல வேண்டும். 

“துல் ஹுலைபா” என்ற இடம் மக்காவுக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. “ஜுஹ்ஃபா” என்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. “கர்னுல் மனாஸில்” மக்காவுக்கு கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது உள்ளது. “யலம்லம்” என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியர்களுக்கான எல்லை.


இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, மலேசியா, சிங்கபூர், இந்தோனே சியா, ஹொங்கொங் ஆகிய நாட்டுப் பிரஜைகள் தரை மற்றும் கடல், வான் மார்க்கமாக ஹஜ் உம்ராவுக்கு பயணிப்போருக்கு “யலம்லம்” என்ற இடம் இஹ்ராம் அணிவதற்கான எல்லையாகும். ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் ஒருவர் இஹ்ராம் அணியாது இவ்விடங்களைக் கடக்கக் கூடாது.

தத்தமது நாடுகளில் இருந்து புறப்படும்போதே நிய்யத்துடன் இஹ்ராம் ஆடையினை அணிபவர்கள் தங்களுக்குரிய எல்லையைக் கடக்கும்போது “தல்பியா” கூறிக்கொள்ள வேண்டும். வீட்டில் அல்லது நாட்டில் இருந்து புறப்படும்போது இஹ்ராம் அணிந்துகொண்டு புறப்படுவதைவிட உரிய எல்லையில் வைத்து நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து கொள்வது ஸுன்னத்தாகும். 

நிய்யத், தல்பியா.


ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் “நவைத்துல் ஹஜ்ஜ வஅஹ்ரம்து பிஹி லில்லாஹி” என்றும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிபவர் “நவைத்துல் உம்ரத வஅஹ்ரம்து பிஹா லில்லாஹி” என்றும் மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். வாயினால் உச்சரிப்பது முஸ்தஹப்பாகும்.

பிறருக்காக ஹஜ் மற்றும் உம்ராவினை நிறைவேற்ற விரும்புவர் யாருக்காக இஹ்ராம் அணிகின்றாரோ அவரின் பெயரையும் அதில் குறிப்பிட்டுக் கொள்ளவேண்டும். உதாரணமாக பஷீர் என்பவருக்காக ஹஜ் செய்வதாக இருப்பின் “நவைத்துல் ஹஜ்ஜ அன் பஷீரின்” என்று நிய்யத் வைக்க வேண்டும். 

நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்து ஒட்டகத்தில் அமர்ந்த பின்னர் பின்வருமாறு “தல்பியாக்” கூறுவார்கள். இஹ்ராம் அணிகின்ற போது மெதுவாக கூறிக் கொள்வதுடன் பிற சந்தர்ப்பங்களில் இதை தனித்தனியே சப்தத்தை உயர்த்திக் கூற வேண்டும்.

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك


பொருள்: “அல்லாஹ்வே! உனது அழைப்பிற்கு விடை கொடுத்து உன்னை மென்மேலும் வழிப்பட்டுவிட்டேன். அல்லாஹ்வே! உனது அழைப்பிற்கு விடை கொடுத்து உன்னை மென்மேலும் வழிப்பட்டுவிட்டேன். உனக்கு எந்த இணையாளரும் கிடையாது. புகழும் அருளும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு எந்த இணையாளரும் கிடையாது.” (புகாரி, முஸ்லிம்)

“ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் வந்து தல்பியாவால் சப்தத்தை உயர்த்தும்படி  உங்களது தோழர்களுக்கு கூறுங்கள் என்று கூறிச் சென்றதாக செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்.” (அபூ தாவூத், நஸாயீ)

தல்பியா நிறுத்தப்பட வேண்டிய இடம்.


இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். “யவ்முன் நஹ்ர்” தினத்தன்று முஸ்தலிபாவிலிருந்து திரும்பி வந்ததும் ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும் வரை தல்பியாக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடிந்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

“நான் நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரபாவில் இருந்து மினா வரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.” (புகாரி)

“நான் அரபாவில் இருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.” (இப்னு குஸைமா)

எந்தெந்த இடங்களில் நேரங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓத வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதோ அந்த இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் தல்பியாவை அதிகம் கூற வேண்டும்.

தல்பியாவின் சிறப்பு.


“தல்பியாக் கூறும் முஸ்லிமின் வலது மற்றும் இடது புறங்களில் காணப்படும் கற்கள், மரங்கள், மண் இங்கும் அங்குமாக பூமி முடிவடையும் வரை தல்பியாக் கூறுகின்றன என நம் நயாகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.” (திர்மிதி, இப்னுமாஜா)

“சப்தமாக தல்பியாக் கூறும் ஹஜ்ஜானது மிகச் சிறந்த ஹஜ்ஜாகும் என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.” (திர்மிதி)

இந்த தல்பியாவினை சகல நேரங்களிலும் இடங்களிலும் சுத்தமான அசுத்தமான கால கட்டங்களிலும் நின்றவர்களாக, அமர்ந்தவர்களாக, உறங்கினவர்களாக ஆண் பெண் இரு சாராரும் சொல்லிக் கொள்ளவது ஸுன்னத்தாகும். தவாஃபு மற்றும் ஸயீ செய்யும் காலங்களில் அவைகளு க்கென தனி துஆக்கள், திக்ருகள் இருப்பதால் தல்பியா ஓத வேண்டியதில்லை.

இஹ்ராம் அணியும் முன்னர் பேணப்பட வேண்டிய அம்சங்கள்.


“நபிகள் நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன் என உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்.” (புகாரி) 

இஹ்ராம் ஆடையினை அணியும் முன்னர் தலை முடி, மீசை, தாடி, கமுக்கட்டு, மர்மஸ்தானம் போன்ற பகுதிகளின் முடிகளில் கவனம் செலுத்த வேண்டும். நீக்கக்கூடிய ரோமங்களை முற்றிலுமாக நீக்கிட வேண்டும். நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள். மாதர்களுக்கு தாடி, மீசை முளைத்திருந்தாலும் அதில் ஆணுக்குரிய சட்டம்தான். ஐந்தை விட அதிகமாக முளைத்திருக்கும் விரல்களில் உள்ள நகத்தையும் இஹ்ராம் அணிந்த பின்னர் வெட்டக்கூடாது. 

நன்றாக குளிக்க வேண்டும். முடியாதவர்கள் வுழு செய்து கொள்ள முடியும். குளித்து அல்லது வுழுச் செய்து கொண்ட பின்னர் உடலுக்கு நன்றாக மணம் பூசிக் கொள்ளுங்கள். இஹ்ராம் ஆடைக்கு மணம் பூசுவது ஹராம். உடலில் பூசிக் கொண்ட வாசனைத் திரவியம் இஹ்ராம் ஆடையில் பட்டுக்கொள்வதில் தப்பில்லை. நிய்யத்துடன் இஹ்ராம் ஆடை அணிவதற்காக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுகொள்வது முஸ்தஹப்பாகும். அதன் முதல் ரக்அத்தில் சூரா பாத்திஹாவுக்குப் பின்னர் சூரத்துல் காபிரூனும்இ இரண்டாம் ரக்அத்தில் சூரத்துல் இக்லாசும் ஓதுவது ஸுன்னத்தாகும்.

“மதீனாவின் எல்லையிலுள்ள துல் ஹுலைபா என்ற இடத்தினை ஹஜ்ஜுக்கா நிய்யத் செய்து அவ்விடத்தினைக் கடக்க முற்பட்டபோது வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து இந்த புனிதமான இடத்தில் தொழுது கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றதாக செம்மல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் நவின்றுள்ளார்கள்.” (புகாரி) இதனடிப்படையில் இஹ்ராம் அணிபவர் இரு ரக்அத்துக்கள் தொழுது கொள்வது ஸுன்னத்தாகும். 

கட்டாயக் குளிப்பு குளிக்க வேண்டிய பெண்கள் இஹ்ராம் அணிய முடியுமா?


குழந்தைகளைப் பிரசவித்த மற்றும் மாதவிடாயுடன் காணப்படும் மாதர்கள் சுத்தமாகுவதற்கு முன்னர் இஹ்ராம் கட்டிக்கொள்வதில் தப்பில்லை. இதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. 

“அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் மனைவி அஸ்மா ரழிய ல்லாஹு அன்ஹா அவர்கள் (துல் குலைபா) மரத்தடியில் முஹம்மத் பின் அபூபக்கர் என்பவரைப் பிரசவித்தபோது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவரைக் குளித்து பின்பு தல்பியாக் கூறிக் கொள்ளும்படி நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.” (முஸ்லிம்) 

“ஸரீப் என்ற இடத்தை (தற்போதைய நவாரிய்யாவை) அடைந்த போது மக்காவிற்குள் நுழையும் முன்னர் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அழுதவர்களாக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வந்தார்கள்.  ஏன் அழுகின்றீர்கள்? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். அவர்கள் ஆம் என்றதும், இது அல்லாஹ் ஆதம் நபியின் பெண் பிள்ளைகள் மீது விதித்த ஒன்றென்று கூறிவிட்டு ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்து கொள்ளுங்கள். ஆனால் குளித்து சுத்தமாகும் வரை கஃபாவைத் தவாப் செய்ய வேண்டாம் என்று விடை பகர்ந்தார்கள்.” (புகாரி)

எனவே பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உண்டான பெண்கள் இஹ்ராம் அணிய முடியும். அதற்காக குளித்துக் கொள்வது ஸுன்னத். இஹ்ராத்தின் போது மாதர்களுக்கு தனியான ஆடை அமைப்பு கிடையாது. முகம், கை என்பன மட்டும் மறைக்கப்பட்டக்கூடாது.

இஹ்ராம் அணிகின்றபோது அமைதியாக மூன்று விடுத்தங்கள் தல்பியாவி னை கூறிக்கொள்வதுடன் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் கூறிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் உதவி தேடி இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளவேண்டும்.

எல்லைகளுக்கு உட்பட்டோர் மற்றும் மக்கா முகர்ரமாவில் வசிப்பவர்களுக்கான எல்லை.

“குறிப்பிட்ட எல்லைப் பிரதேசங்களுக்கு உட்பட்டோர் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தும் மக்காவாசிகள் மக்காவில் இருந்தும் இஹ்ராம் அணிவர் என நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

எனவே குறிப்பிட்ட எல்லைப் பிரதேசங்களில் பிற நாடுகளில் இருந்து பணி புரிவதற்கென்று அங்கு சென்று வாழ்பவர்கள் உட்பட சகலரும் அவரவர்கள் வதிவிட எல்லையில் ஹஜ் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ள முடியும். 

மக்காவாசிகளும் மக்காவில் பணியாற்றுவதற்காகச் சென்று ஹரம் எல்லைக்குள் வாழ்பவர்களும் ஹஜ்ஜுக்காக மாத்திரம் அவரவர்களின் வீடுகளில் இருந்தவாறு இஹ்ராம் அணிந்து கொள்ள முடியும். மக்காவாசிகளும் மக்காவில் பணியாற்றுபவர்களும் உம்ராச் செய்வதாக இருந்தால் “தன்யீம்” என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் “மஸ்ஜித் ஆயிஷா” அமையப் பெற்றிருக்கிறது.

வெளி நாடுகளில் இருந்து ஹஜ் உம்ராவுக்கு செல்கின்றவர்கள் நாடு திரும்புவதற்குள் மீண்டும் உம்ரா செய்ய விரும்பினால் மேற் சொன்ன இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும். 

மாதவிடாய் ஏற்படுவதை பிற்போடும் மாத்திரைகளை உபயோகிக்க முடியுமா?


ஹஜ் மற்றும் உம்ராவுக்காக பயணிக்கும் மாதர்கள் மாதவிடாய் வருவதை பிற்போடுவதற்கான மாத்திரைகளை பின் விளைவுகள் இல்லாதிருப்பின் உபயோகித்துக்கொள்வதில் தப்பில்லை. அவ்வாறான மாத்திரைகளை உபயோகித்துக்கொள்ளாத மாதர்களுக்கு குறிப்பிட்ட கடமைகளை பூர்த்தி செய்வதற்குள் மாதவிடாய் ஏற்படுமாக இருந்தால் அசுத்தமான நிலையில் “தவாஃப்”  செய்வதற்கு மாத்திரம் மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிற கடமைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். குளித்து தூய்மையான பின்பு விடுபட்ட தவாஃப் கடமையை நிறைவேற்ற முடியும்.

ஹஜ்ஜின் வகைகள்.

ஹஜ்ஜையும் உம்ராவையும் மூன்று விதமாகச் செய்யலாம்.


1- இஃப்ராத்: “அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன்” என நிய்யத் செய்து ஹஜ்ஜுக்காக மட்டும் முதலில் இஹ்ராம் கட்டி ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றி விட்டு இஹ்ராத்தில் இருந்து விடுபட்டுவிட்டு பின்னர் அதே வருடம் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டுவது. இதற்கு “இஃப்ராதுன்” என்று சொல்லப்படும். இது ஹஜ்ஜின் வகைகளிற் சிறந்தது. மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராத்தினை மட்டுமே கட்டி ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

இவர் கஃபாவுக்குள் நுழைந்ததும் நிறைவேற்றப்படும் தவாஃபுல் குதூமை நிறைவேற்றியதைத் தொடர்ந்து “ஸயீ” செய்திருப்பின் துல்ஹஜ் பிறை பத்தில் நிறைவேற்றப்படும் தவாஃபுல் இஃபாழாவுக்குப் பின்னால் “ஸயீ” செய்ய வேண்டியதில்லை. இவருக்கு தவாஃபுல் குதூம் தவறி விடுமானால் அதில் தவறில்லை. இவருக்கு ஃபித்யாவெனும் தண்டப் பரிகாரமாக மிருகத்தை அறுத்துப் பலியிடுவது வாஜிபுமில்லை.

2- கிரான்: ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டுவது. இதற்கு “கிரானுன்” என்று சொல்லப்படும். இவர் “அல்லாஹும்ம லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” என நிய்யத் செய்து முதல் தவாபினை (தவாஃபுல் குதூம்) நிறைவேற்றிய பின்னர் ஸயீ செய்து இருப்பின் பிறை பத்தில் புரியப்படும் தவாஃபுல் இஃபாழாவுக்குப் பின்னர் ஸயீ செய்யத் தேவை இல்லை. தவாஃபுல் குதூம் தப்பிவிட்டாலும் தப்பில்லை. 

இவர் பிறை பத்தாம் நாளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பூர்த்தி செய்த பின்னரே இயல்பான நிலைக்குத் திரும்புவார். இவர் வெளியூர்காரராக இருப்பின் “ஃபித்யா” கொடுப்பது வாஜிபாகும். ஹரம் எல்லையில் குடியிருப்பவர்களுக்கு அந்த ஃபித்யா வாஜிபாகாது. 

3- தமத்துஃ- ஹஜ்ஜுடைய மாதம் ஒன்றில் எல்லையில் இஹ்ராம் அணியும் ஒருவர் “அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்” என்ற தல்பியாவுடன் உம்ராவுக்காக மாத்திரம் நிய்யத் செய்து மக்காவுக்குச் சென்று உம்ராவுக்கான சகல கடமைகளையும் நிறைவு செய்த பின்னர் இஹ்ராத்தினைக் களைந்து சாதாரண நிலைக்கு வந்து மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும்.  

பின்னர் துல் ஹஜ் மாதம் பிறை எட்டில் மக்காவில் இருந்து ஹஜ்ஜுக்காக மீண்டும் நிய்யத் செய்து “லப்பைக ஹஜ்ஜன்” என்ற நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து தனது ஹஜ்ஜுக்கான சகல கடமைகளையும் நிறைவு செய்யும் வழி முறைக்கு ஹஜ் தமத்துஃ எனக் கூறப்படும். இவரும் ஃபித்யாக் கொடுப்பது வாஜிபாகும்.

எனவே “கிரான்” மற்றும் “தமத்துஃ” முறைப்படி ஹஜ் செய்தவர்கள் மீது வாஜிபாக்கப்பட்டுள்ள ஃபித்யாவினை “ஹத்யுன்” என்றும் சொல்லப்படும். இது துல் ஹஜ் பிறை பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றுதான் கொடுக்க வேண்டும். மேலும் அதை ஹரம் ஷரீபின் எல்லைக்கள் கொடுக்க வேண்டும். அதிலும் மினாவில் கொடுப்பது ஸுன்னத்தாகும். (ஃபித்யா தொடர்பான கருத்துக்கள் பின்னால் விபரிக்கப்படும்.)

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஹஜ்ஜுக்காக செல்வோர் தமத்துஃ முறையினை அதிகம் கடைப்பிடிப்பதுண்டு. அதுவே அவர்களுக்கு சிறந்தது. எளிதானது.

தொடரும்...

ஹஜ்ஜின் சிறப்புக்களும் அதன் சட்டங்களும்.

ஹஜ்ஜின் சிறப்புக்கள்.


அமல்களில் சிறந்தது எது? என்று நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவதென்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்குஇ ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ் என்று நபிகளெம் பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள்.” (புகாரி)

“ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ரா செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஓப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை” என்று பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி)

“உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்” என்றும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள். (புகாரி)

ஹஜ், உம்ராவை சிறப்பித்து ஏராளமான ஹதீதுகள் பதிவாகியுள்ளன. பெருமானார் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் உலகில் தோன்றிய சகல நபிமார்களும் ஹஜ்ஜினை நிறைவேற்றியுள்ளார்கள். 

பெண்கள் மீதும் ஹஜ் கடமை.


“அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் போரில்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும் உம்ராவும் என்று விடையளித்தார்கள்.” (அஹ்மத், இப்னு மாஜா)

தக்க துணை அவசியம்.


பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களைக் கொண்ட எந்தவொரு பயணமும் மேற்கொள்ளக் கூடாதென்பது இஸ்லாமிய சட்டமாகும். கணவர் அல்லது மஹ்ரமான ஆண் அல்லது நம்பிக்கைக்குரிய பயணத் தோழிகள் பெண்களுக்கு துணையாக இருப்பது அவசியம். 

“திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் அன்றி பெண்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாதென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தமது சொற்பொழிவில் சொன்னபோது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார். நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன் என்று கூறினார். அதற்கு நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக என்று கூறினார்கள்.” (புகாரி)

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?


சிறு குழந்தைகளைச் சுமந்திருந்திருக்கும் பெண்மணிகள் அதைக் காரணம் கூறி  ஹஜ் பயணத்தினை தள்ளிப் போடத் தேவையில்லை. சிறு குழந்தை களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்ல இயலும்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் “ரவ்ஹா” என்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார் என்று விசாரித்தனர். முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் விசாரித்தனர். நான் அல்லாஹ்வின் தூதர் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். அப்பொது ஒரு பெண்மணி சிறு பையனை தூக்கிக் காண்பித்து இவருக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் கூலி உனக்கு உண்டு என்று விடை பகர்ந்தார்கள்.” (முஸ்லிம்)

“நான் ஏழு வயது சிறுவனாக இருக்கும்போது நபிகள் நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள் என்று நபித் தோழர் ஸாயிப் பின் யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்.” (புகாரி)

சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்ல முடியும். அவ்வாறு சிறு பராயத்தில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து அக்கடமையினை நிறைவேற்றுவதற்கான வசதி வா ய்ப்பைப் பெற்றால் அப்பொது அவர்கள் ஹஜ் செய்வது கடமையாகும். 

முதியவர்கள், நோயாளிகள் மீது ஹஜ் கடமையா?


“அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்ய அங்கு செல்ல சக்தியுள்ளவர்கள் மீது கடமையாகும்.”  (ஆல இம்ரான் 96)

இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்வதற்கு விரும்பும் ஒருவரிடம் பொருளாதார வசதி மட்டுமல்ல பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையும் அவருக்கு சீராக இருத்தல் வேண்டும். பிரயாணமே செய்ய இயலாத முதியவர்கள், தீராத நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது. 

ஆனாலும் அவர் தன்மீதான கடமையினை நிறைவேற்றி வைக்க அவருக்குப் பகரமாக இன்னுமொருவரை அனுப்பி வைக்க முடியும். தீரும் என்ற எண்ணமுள்ள நோயாளிகள் அவருக்காக ஹஜ் அல்லது உம்ராச் செய்திட இன்னுமொருவரை அனுப்பி வைக்க முடியாது. அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர் ஹஜ் கடமையினை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும். “களாவான” ஹஜ் அல்லது “நேர்ச்சையான ஹஜ்” போன்றவற்றை நிறைவேற்ற வேண்டியவராக இருக்கவும் கூடாது. 

ஹஜ்ஜே செய்யாத ஒருவர் இன்னுமொருவருக்காக இஹ்ராம் கட்டினால் அந்த ஹஜ் அவர் மீது கடமையான ஹஜ்ஜாக நிறைவேறிவிடும். அவ்வாறே ஹஜ்ஜினை “களாச்” செய்யவேண்டியவர் அல்லது ஹஜ் செய்வதாக “நேர்ச்சை” செய்த ஒருவர் பிறருக்காக இஹ்ராம் கட்டினால் அது அவரது “களா” ஹஜ்ஜாக அல்லது “நேர்ச்சை” செய்த ஹஜ்ஜாக நிறைவேறிவிடும். இதற்கெல்லாம் பிறகுதான் பிறருக்காக ஹஜ் மற்றும் உம்ரா செய்ய முடியும். 


ஒரு பயணத்தில் பல ஹஜ்ஜுகள்மற்றும் பல உம்ராக்கள் செய்ய முடியூமா?


ஒரே வருடத்தில் ஒரே பயணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உம்ராச் செய்த தற்கான சான்று எதுவும் இல்லை. அவ்வாறே ஒரு பயணத்தில் பல உம்ரா க்கள் செய்வது கூடாது என்பதற்கான தடையையும் காண முடியவில்லை. இருந்தும்கூட இதற்கு இமாமுனா ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்ன வர்கள் அனுமதி வழங்கியிருப்பதுடன், இப்னு தைமிய்யா “பித்ஆ” என்று கூறுகிறார். ஆனாலும் பின் பாஸ் என்பவர் கூடும் என்று கூறுகிறார். ஒரு நாளில் பல உம்ராக்கள் செய்யவும் முடியும் என்றும் இவர் கூறுகின்றார். தனக்காக என்றாலும் சரி பிறருக்காக என்றிருப்பினும் சரியே. 

தொடரும்...

திங்கள், 8 ஜூலை, 2019

நபி வழியைப் பின்பற்றுங்கள்.


நபி வழியைப் பின்பற்றுங்கள்.



மக்காவினை மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நேசித்திருக்கின்றார்கள். எனவே ஈமானுள்ள ஒவ்வொருவரும் மக்காவினை நேசிக்க கடமைப்பட்டுள்ளனர். எனினும் மக்காவைவிட மதீனாவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அதிகம் நேசித்திருக்கின்றார்கள். எனவே நாமும் அவ்வாறே நேசிக்க கடமைப்பட்டுள்ளோம்.

நபியுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவுக்காக பிரார்த்தனை புரிந்ததைவிட இரு மடங்கு மதீனாவுக்காக மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தித்திருக்கின்றார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

யா அல்லாஹ்! மக்காவினை நேசிக்க வைத்ததைவிட அதிகம் மதீனாவை நேசிக்க வைப்பாயாகஎன்றும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பிரார்த்தனை புரிந்திருக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)

யா அல்லாஹ்! மக்காவிற்கு அருள் புரிந்ததைவிட இரு மடங்கு அதிகமாக மதீனாவுக்கு அருள் புரிவாயாகஎன்றும் எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டியுள்ளார்கள். (புகாரி,முஸ்லிம்)

மக்கா, மதீனா ஆகிய இரு புண்ணிய பூமிகளில் மரணிப்போர் அச்சம் தீர்ந்தவராக மறுமையில் எழுப்பப்படுவார்.” (தபரானி) என்று சொன்ன நாயகம் அவர்கள் இயலுமானவர்கள் மதீனாவில் மரணித்துக் கொள்ளுங்கள். அவ்வாறு மதீனாவில் மரணிப்பவருக்கு நான் ஷஃபாஅத்துச் செய்வேன்  என்று கூறி மதீனாவில் மரணிப்பதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள். (அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான், தபரானீ, பைஹகீ.)

மக்காவானது மதீனாவைவிட அதிகம் சிறப்பானதென்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மஸ்ஜிதுல் ஹராமானது மஸ்ஜிதுந் நபவியைவிடச் சிறப்பானதென்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் அந்த சிறப்பு செம்மல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களால் அதற்கு வழங்கப்பட்டதே தவிர வேறில்லை என்ற காரணத்தினால், தற்பொழுது ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திருவுடலைச் சுமந்து கொண்டிருக்கும் மண்ணறையானது கஃபாவை விடச் சிறந்ததாகும். இல்லை இல்லை அது அர்ஷை விடச் சிறப்பானது. (அஷ்ஷிஃபா ஃபி தஃரீபீ ஹுகூகில் முஸ்தபா, வஃபாஉல் வஃபா ஃபி அக்பாரி தாரில் முஸ்தபா, அல் வஃபா, துர்ருல் முக்தார், மினஹுல் ஜலீல் ஷரஹ் முக்தஸரு கலீல், மதாலிபு உலிந் நுஹா)

ஒரு உண்மை விசவாசியின் மகத்துவம் உன்னுடைய மகத்துவத்தை விட மிகச் சிறப்பானது  (இப்னு மாஜா) என்று கஃபதுல்லாஹ்வைப் பார்த்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் பேசுகின்றார்கள் என்றால் அந்த கஃபாவை விட எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் என்ன தப்பு இருக்கப் போகின்றது?

இது (மக்கா) வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி நாள்வரை அல்லாஹ்வினால் பரிசுத்தமாக்கப்பட்ட புண்ணிய பூமியாகும். இது மனிதர்களினால் பரிசுத்தமாக்கப்பட்ட பூமி அல்ல. அப்படியிருந்தும் கூட இங்கு அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்காக மாத்திரம் சிறிது நேரம் அந்த புனிதம் நீக்கி வைக்கப்பட்டு இரத்தம் சிந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.” (புகாரி முஸ்லிம்.) இது இறைத் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பிறப்பிற்காகப் படைக்கபட்ட பூமியாகும்.

அல்லாஹ்வின் தூதர் கோமான் நபிகளெம் பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் வானம் பூமி படைக்கப்படும் முன்பிருந்தே அல்லாஹ்வினால் பரிசுத்தமாக்கப்பட்டிருந்திருக்கின்றார்கள். அவர்களின் உண்மையான யதார்த்த நிலை மறுமையில்தான் புரியவரும். அதன் பின்னரும் அவர்கள் பரிசுத்தமானவர்கள்தான்.

அல்லாஹ்வின் ஆலயமான கஃபதுல்லாஹ்வினை அல்லாஹ்தான் புன்னிய பூமியாக ஆக்கி வைத்தானே தவிர மனிதர்களல்ல என்றுரைத்த அருமைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள், மக்காவினை நபியூல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  புண்ணிய பூமியாக ஆக்கியதாகவும் அறிவித்திருப்பதைக் காண முடிகிறது. (முஸ்லிம்)

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களினூடாக மக்காவினை புண்ணிய பூமியாக அல்லாஹ் வெளிப்படுத்தி வைத்தான் என்ற கருத்தினை மேற்குறிப்பிட்ட நபி மொழி சுமந்து நிற்கிறது. இதனடிப்படையில்தான் நான் மதீனாவினை புண்ணிய பூமியாக்கி வைத்தேன்என்று அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்த தகவலும் ஆகும்.

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜினை விதியாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுங்கள்என்று நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது பகர்ந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்று விடை பகர்ந்தார்கள்.” (முஸ்லிம்)

சகோதர பெருமக்களே! இவ்வகிலங்களில் நிகழ்கின்ற நிகழ்வுகள் அனைத்திற்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவனே. சர்வ வல்லமையும் உள்ள அவன், அந்நிகழ்வுகள் அனைத்தினையும் தூதுவர்கள் என அழைக்கப்படும் நபிமார்கள், ரசூல்மார்கள், அமரர்க்ள் வாயிலாக அவற்றினை வெளிப்படுத்தி நிகழ்த்திக்  கொண்டிருக்கின்றான். தூதுவர்கள் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையிலான தொலைத் தொடர்பு சாதணங்கள்.

எனவே தூதுவர்களுக்கெல்லாம் தலைவராகிய அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களுக்கு எந்தவொரு சக்தியுமில்லை என்று எண்ணி அவர்களை தூரத்தில் வைத்துவிட்டு அல்லாஹ்வினை நெருங்க முடியாதென்ற இதயசுத்தி எனும் பலமான உள்ளம் சார்ந்த பயணப் பொதிகளுடன் தூய அஹ்லுஸ் ஸஷுன்னத் வல்ஜமாஅத் அகீதாவென்னும் அச்சம் தீர்ந்த சீரிய பாதையில் பயணித்து ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். இதுவே ஹஜ் கடமையினை நிறைவேற்ற விருப்பம் கொள்ளும் ஒருவரிடம் இருக்கவேண்டிய யதார்த்தமான சக்தியாகும்.

பொருளீட்டலில் ஹராம் ஹலாலைப் பேண முடியாத அபாயகரமான கால கட்டத்தினை நாம் கடந்து சென்று கொண்டிருப்பது போன்று அகீதாவிலும் சரி பிழை கண்டு கொள்ள முடியாததொரு இக்கட்டான காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே மதீனா பற்றிப் பேசும் மக்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மதீனத்து ஆலிம் ஆலிம்களிற் சிறந்தவர், பாம்பு தன் பாதுகாப்பிற்காக அதன் பொதும்பில் நுழைவது போன்று ஈமானின் பாதுகாப்பு மதீனாவில் தங்கியிருக்கிறதென்பதை மறந்துவிடாதீர்கள்.
 
புன்னிய பூமிகளுக்கு செல்கின்ற மக்களே! மக்கா மற்றும் மதீனா எல்லைகளில் மிக்க மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். அப்பிரதேசங்களிலுள்ள முள்ளு மரங்களைக்கூட பிடுங்கிவிடக்கூடாதென்று இஸ்லாம் வலியுறுத்திக் கொண்டிருக்கும் போது மரண தறுவாயிலும் உம்மதீ, உம்மதீ என்ற கவலையுடன் வாழ்ந்து வந்த வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள்  சிந்தனையை உள்ளத்தில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டு எப்படி அப்பிரதேசங்களில் காலடி வைத்து ஹஜ் கடமையை நிறைவேற்றப் போகின்றீர்கள்?.

மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்து நம்மைப் பாதுகாத்து நமக்கு அபயமளிக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் எண்ணத்தினை உள்ளங்களில் இருந்து பிடுங்கி யெறிந்து, கண்ணிமை போல் காக்கவேண்டிய அவர்களின் பிறந்த புண்ணிய இல்லம் பொற் பாதங்களின் சுவடுகள் பதிந்த சுவனத்துப் பாதைகளை பாழடித்து இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, திரும்பும் இடமெல்லாம் நவீன கட்டிடங்கைள வடிவமைத்து அதன் வெளி அழகு கவர்ச்சிகளில் மக்களை மதிமயக்கி கொடுங்கோல் ஆட்சி புரியப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டினூடாக தூவப்படுகின்ற நச்சு விதைகளுக்கு தரகர்களாகப் பணி புரியும் தறுதலைகளின் தலைமைத்துவத்தில் ஹஜ் மற்றும் உம்ராப் பயணம் மேற்கொள்வதில் இருந்தும் உங்ளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிட மக்கா முகர்ரமா சென்று வரும் தற்கால ஹாஜிகளுக்கு உடலில் சக்தியிருக்கிறது. பயண வழி அச்சமற்ற தாக இருக்கிறது. வெளிவாரியான பாவச் செயல்களில் இருந்து முடிந்தவரை தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஆனாலும் உள்ளத்தில் சக்தி இல்லை. உள்வாரியான பயண வழி அசுத்தமடைந்திருக்கிறது.

உள்ளம் பாவங்களில் மூழ்கிப்போய் உள்ளது. வெளி வேசம் வெளிச்சமாக,கட்சிதமாக, கவர்ச்சிமிக்கதாக இருக்கிறது. உள்வேசமோ ஊத்தை நிறைந்து ஊனமுற்றிருக்கிறது. இதனால் அவர்களின் ஹஜ் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் என்ற அந்தஸ்த்தைவிட்டும் வெகு தூரம் சென்றுவிட்டது.

நாடு, மொழி, இனம், நிறம்,கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் களைந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் ஒரே கொள்கையுடன் கூடும் உலக மகா நாடு ஹஜ்.

வேற்றுமைளை மறந்து ஒற்றுமையைப் பறை சாற்ற வேண்டிய புனித மிக்க ஆலயத்தில் திட்டமிடப்பட்ட சதியின் அடிப்படையில் வேறுபட்டு நிற்கும் கொடுமையைக் காண்கின்றோம்.

இயக்கங்களின் பெயரால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பதைக் காண முடிகின்றது. இது 1925ஆம் வருடத்திற்குப் பின்னர் உருவான அவல நிலையாகும்.  இதற்கு அடித்தளமிட்டு துணை நிற்பவர்கள் யூத நஸாராக்களாகும். இவர்களினால் அஹ்லுஸ் ஸஷுன்னத் வல்ஜமாஅத்தினர் சொல்லொண்ணாத் துன்ப துயரங்களை சந்திக்கின்றனர்.

لا يثبت أحد على لأوائها وجهدها إلا كنت له شفيعا او شهيدا يوم القيمة

மதீனாவில் தொல்லைகளுக்கும் துன்ப துயரங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு பொறுமையுடன் அங்கு தரிப்பவருக்கு நான் மறுமையில் மன்றாடுவேன்என்ற மன்னர் மஹ்மூதரசர்ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தகவல் ஒன்றுதான் இச்சந்தர்ப்பத்தில் நமக்கு மன ஆறுதலைத் தருகின்றது.
தொடரும்...

ஞாயிறு, 7 ஜூலை, 2019

உள்ளம் செத்தவர்களைப் பின்பற்ற வேண்டாம்,


உள்ளம் செத்தவர்களைப் பின்பற்ற வேண்டாம்.



ولا تطع من أغفلنا قلبه

யாருடைய இருதயங்களை நாம் இருட்டாக்கி வைத்து விட்டோமோ அவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.” (அல்குர்ஆன் )

எனவே இதயம் இருண்டவர்களைப் பின்பற்றாதீர்கள். பொருளீட்டளில் சந்தேகம் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களும் எவர்களையெல்லாம் இதய சுத்தியுள்ளவர்கள் என்று புகழ்ந்து பாராட்டினார்களோ அவர்களை வழிப்படுங்கள்.

எனது சொத்துக்களில் ஒரு சதமும் சந்தேகத்திற்கிடமானவை இல்லையென்று உத்தரவாதமளித்த உத்தமப் பெருமக்களான உண்மைக்குண்மையான இமாம்கள், சூபியாக்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் பின்பற்றுங்கள். அவ்வாறானவர்களின் அறிவுரைகளைத்தான் அடியேன் இப்பிரதியில் பதித்துள்ளேன்.

கிராமங்களுக்கெல்லாம் அன்னை.


அல்லாஹ்வின் இல்லமான புனித கஃபா பூமியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதை இன்றைய நவீன அறிவியல் ஏற்றுக் கொண்டிருக்கிறது. உம்முல் குரா கிராமங்களுக்கெல்லாம் அன்னை என்று அல்குர்ஆன் மக்காவுக்குப் பெயர் சூட்டியுள்ளது. இது பூமியின் அடித்தளமாகும். இங்கிருந்தான் பூமி துவக்கம் பெற்றதென்று இமாம் ராஸீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  இது பூமியின் முதல் தளமாகும். கடலினால் சூழப்பட்டிருந்த இந்த பூமி மக்காவில் இருந்துதான் வெளிப்படத் துவங்கியுள்ளது.


دحيت الأرض من مكة وأول من طاف بالبيت الملائكة

மக்காவில் இருந்து பூமி வெளிப்படுத்தப்பட்டது. அல்லாஹ்வின் இவ்வில்லத்தினை அமரர்கள் முதன் முதலில் தவாஃப் செய்தார்கள்என்று தூய நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (தப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தப்சீர் தபரீ, அக்பாறு மக்கா)

நிச்சயமாக மனிதர்களுக்கு முதன்மையாக வைக்கப்பெற்ற ஆலயம் மக்காவில் இருப்பதுதான். அது பாக்கியமுடையதாகவும் உலகத்தாருக்கு நேர் வழிகாட்டியாகவும் இருக்கிறது.” (அல் பகரா 95)

புனித மிகு ஆலயமான கஃபாவினை மனிதர்களுக்கு முன் அமரர்கள் தவாஃப் செய்துள்ளனர். இதற்குப்பின் மனிதர்களில் முதன் முதலில் தவாஃப் செய்ய அடித்தளமிட்டவர் முதல் மனிதர்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும். நபியுல்லாஹ் நூஹ் அலைஹிஸ்லாம் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் முற்றிலும் சிதைந்து போன இந்த ஆலயத்தினை மீண்டும் நபியுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புனரமைத்தார்கள்.

இந்த ஆலயத்தினை சகல நபிமார்களும் தரிசித்துள்ளனர். இதில் பல நபிமார்களின் அடக்கஸ்தலங்களும் இருக்கின்றன. எனினும் இம்மண்ணில் எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களைத் தவிர வேறு எந்த நபியும் பிறக்கவும் இல்லை. இங்கிருந்து நேர் வழிக்கான அழைப்பிதனை சமூகத்திற்கு வேறெவரும் விடுக்கவும் இல்லை. எனவே இதில் பாக்கியமும் நேர் வழியும் இருப்பதாக அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையே இப்பூமி அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அகிலங்களின் அடிப்படை.


புனித மக்கா முகர்ரமாவினை உம்முல் குரா கிராமங்களுக்கெல்லாம் அன்னை என்று அல்குர்ஆன் சொன்னதுபோல் அண்ணல் நபி முஜ்தபா ஸல் லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை உம்மு நபிஎன்று சொல்வதையும், அவ்வாறே அண்ணலவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தின் முழுத் தத்துவங்களையும் உள்ளடக்கிய சூரத்துல் ஃபாத்திஹாவினையும் உம்முல் குர்ஆன்என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

எனவே மக்கமா நகர்  பூமிகளுக்கு அடித்தளமாகவும் சூரத்துல் பாத்திஹா அல்குர் ஆனுக்கு அடித்தளமாகவும் இருப்பது போன்று மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கின்றார்கள். இல்லையில்லை அகிலங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கின்றார்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களில் இருந்தும்தான் அகிலங்களெல்லாம் அகண்டு விரிந்து சென்ற தென்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை இருக்கிறது. உடலும் உள்ளமும் ஊனமுற்று உலா வருகின்றவர்களுக்கு இவ்வுண்மை எவ்வாறு புரியப்போகின்றது?.

மனிதர்களுக்கு முதன்மைப்படுத்தப்பட்ட ஆலயமாக கஃபா இருப்பதுபோன்று அந்த கஃபாவினை முன்னோக்கி அல்லாஹ்வினை வணங்கிடும் முதன்மை மனிதராக மன்னர்முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களை அடையாளப்படுத்தி வைத்தனூடாக அகிலங்களுக் கெல்லாம் முதன்மையானவராக ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவலினை அல்லாஹ் அறிவித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அகம் தெளிந்தவர்கள் அறிவார்கள்.

பாக்கியமும் உலகத்தாருக்கான நேர்வழியும் கஃபாவில் இருக்கின்றதென்றால் அந்த பாக்கியமும் நேர் வழியும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களினூடாகத்தான் வெளிப்படுத்தப்பட்டது. உம்முல் குராவில் உம்மு நபி உதயமான பின்னர்தான் அதன் உயர்வு வானளாவ உயர்ந்தும் போனது.

அல்அமீனான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் மக்காவில் உதயமாக இருக்கின்றார்கள் என்பதற்காகவே அது பலதுல் அமீனாகஅறிமுகப்படுத்தப்பட்டது.


தொடரும்.....

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...