திங்கள், 20 ஜூன், 2022

தர்ஜமதுல் குர்ஆன் பிஅஸீஸில் Bபயான் அறபி மூலத்துடன், அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அடிப்படையிலான அல்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு அறிமுகம்

 

தர்ஜமதுல் குர்ஆன் பிஅஸீஸில் Bபயான் அறபி மூலத்துடன், அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அடிப்படையிலான அல்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு 


 

ترجمة القرآن بعزيز البيان

 

தர்ஜமதுல் குர்ஆன் பிஅஸீஸில் Bபயான்

 

அறபி மூலத்துடன், அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் அடிப்படையிலான அல்குர்ஆனின்  தமிழ் மொழிபெயர்ப்பு

 

 

முப்பதாவது ஜுஸ்உ

முப்பத்தியேழு அத்தியாயங்களைக் கொண்டது

 

 

தொகுப்பாசிரியர்:

 

காதிமு கிதாபில்லாஹில் அஸீஸ்

ஃபழீலத்துஷ் ஷெய்கு அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மெளலானா, குஷ்ஹாலி, அல்-ஹஸனி, அர்ரிஃபாயீ

அதாலல்லாஹு பகாஅஹு

 

வெளியீடு:

ஜம்யிய்யது இஷாஅதி அஹ்லிஸ் ஸுன்னா

மதுரங்குளி, விருதோடை, புத்தளம், இலங்கை.

077-3557710, 077-1486819

 

 

 

 

 

 

 

 

புத்தக விபரத் தொகுப்பு

 

நூலின் பெயர் : தர்ஜமதுல் குர்ஆன் பிஅஸீஸில் Bபயான்

ஆசிரியர்      : காதிமு கிதாபில்லாஹில் அஸீஸ்

ஃபழீலத்துஷ் ஷெய்கு அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மெளலானா, குஷ்ஹாலி, அல்-ஹஸனி, அர்ரிஃபாயீ

அதாலல்லாஹு பகாஅஹு

மொழி        : தமிழ்

பதிப்புரிமை   : ஆசிரியருக்கு

வடிவமைப்பு  : அபூ தூபா, ஏறாவூர்

புத்தகத் தொடர் இலக்கம்: 50

பக்கங்கள்

பிரதிகள்      : 2500

முதல் பதிப்பு : 2021, 1443

வெளியீடு : ஜம்யிய்யது இஷாஅதி அஹ்லிஸ் ஸுன்னா

மதுரங்குளி, விருதோடை, புத்தளம், இலங்கை.

  செல்: 0773557710 – 0771486819

வட்சப்: 0773557710 – 0771486819

அச்சிட்டோர் : ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ்

 சென்னை 0091-9841567213

 

 

فرحت سرورا وانتهضت لأحمدا

إلهى على ما قد هدانى بأحمدا

صلاحى بماحى انتحى متعمدا

فلاحى نجاحى فى امتداحى محمدا

رجوت به جنات عدن تزخرف

 

 

பொருளடக்கம்

 

வாழ்த்துரை

வாழ்த்துரை

வாழ்த்துரை

வாழ்த்துரை

வாழ்த்துரை

வாழ்த்துரை

வாழ்த்துரை

என் கருத்து

1 - சூரத்துன் நபஇ

2 -  குறிப்பு

3 -  மலக்குமார்களின் ஷஃபாஅத்

4 -  நல்லடியார்களின் ஷஃபாஅத்

5 -  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்

6 -  அல்-குர்ஆனின் ஷஃபாஅத்

7 -  குழந்தைகளின் ஷஃபாஅத்

8 -  நாயகமே! யா ரசூலல்லாஹ்! எனக்குப் பரிந்துரை செய்யுங்கள்

9 -  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்

10 -  இப்னு அப்தில் வஹ்ஹாபும் மெளலவி இஸ்மாயீல் திஹ்லவியும்

11 -  சூரத்துந் நாஸிஆத்

12 -  குறிப்பு

13 -  வானம் பூமியின் நிர்வாகிகள்

14 -  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு நாளைய நிகழ்வுகள் தெரியுமா?

15 -  சூரத்து அபஸ

16 -  குறிப்பு

17 -  சூரத்துத் தக்வீர்

18 -  குறிப்பு

19 -  சூரத்துல் இன்ஃபிதார்

20 - குறிப்பு

21 -  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களினால் நாம் பெற்ற நன்மைகள்

22 -  சூரத்துல் முதஃப்ஃபிஃபீன்

23 -  குறிப்பு

24 -  சூரத்துல் இன்ஷிகாக்

25 -  நிமிடத்திற்கு நிமிடம் நிலை உயரும் நபிகள் நாயகம்

26 -  சூரத்துல் புரூஜ்

27 -  குறிப்பு

28 - கலீஃபா உமர்  ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கப்று

29 -  சுவர்க்கம், நரகம் உண்டா?

30 -  சூரத்துத் தாரிக்

31 -  குறிப்பு

32 -  நபியே! நாயகமே! யா ரசூலல்லாஹ்! நீங்கள்தான் ஒளிரும் நட்சத்திரம்

33 -  நட்சத்திரங்களும் ஒலி எழுப்புகின்றன

34 -  திருப்பி அனுப்பப்படும் ஒலி அலைகள்

35 -  சூரத்துல் அஃலா

36 -  சூரத்துல் ஙாஷியா

37 - குறிப்பு

38 - ஒட்டகப்பால் நீரிழிவு நோயை குணப்படுத்தும்

39 -  சூரத்துல் ஃபஜ்ர்

40 -  குறிப்பு

41 - அதிகாலை என்பது அண்ணல் நபி நாயகம் அவர்களாகும்

42 -  நஃப்ஸுகளின் வகைகள்

43 - உங்கள் இறைவனின் ஆற்றல் வரும்

44 - சூரத்துல் பலத்

45 - குறிப்பு

46 நபியே! யா ரசூலல்லாஹ்! நீங்கள் இந்நகரத்தை விட்டு வெளியேறும்போது நான் இந்நகரத்தின் மீது சத்தியம் செய்ய மாட்டேன்

47 - சூரத்துஷ் ஷம்ஸி

48 - ஆத்மாவை அழகுபத்தி வைக்கும் அண்ணல் நபி நாயகம்

49 - சூரத்துல் லைலி

50 - குறிப்பு

51 - ஹழ்ரத் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு

52 - சூரத்துழ் ழுஹா

53 -  குறிப்பு

54 -  ழால்லுன் என்ற வார்த்தையின் விளக்கம்

55 - தக்பீர் சொல்லுங்கள்

56 - சூரத்துல் இன்ஷிராஹ்

57 - குறிப்பு

58 நபியே! நாயகமே! நீங்கள் அகிலங்களுக்கான அடிப்படையாகும்

59 -  கல்விமான்கள் பார்வையில் கூட்டு துஆ

60 சூரத்துத் தீன்

61 - குறிப்பு

62 - சுவனத்து பழ வர்க்கம்

63 - بلى وأنا على ذلك من الشاهدين  என்று கூறிக் கொள்ளுங்கள்

64 - சூரத்துல் அலக்

65 - குறிப்பு

66 நபியே! நாயகமே! நீங்கள் அல்லாஹ்வின் அடையாளச் சின்னமாகும்

67 - அல்லாஹ், அண்ணல் நபி நாயகத்திற்கு அனைத்தையும் அறிவித்துக் கொடுத்தான்

68 - சூரத்துல் கத்ரி

69 - குறிப்பு

70 - ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவை அமல்களால் அலங்கரியுங்கள்

71 -  புனித லைலதுல் கத்ர் இரவு எந்த நாள் ?

72 - லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்

73 -  சூரத்துல் Bபய்யினா

74 -  குறிப்பு

75 -  யா அல்லாஹ்! இறுதி நபியின் பொருட்டால் எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக!

76 -  சூரத்துஸ் ஸில்ஸால்

77 -  குறிப்பு

78 - சப்தமாக திக்ர் செய்தல்

79 - சூரத்துல் ஆதியாதி

80 - குறிப்பு

81 - சூரத்துல் காரிஆ

82 - “உம்மி நபி” என்பதன் தெளிவான விளக்கம்

83 - சூரத்துத் தகாஸுர்

84 - குறிப்பு

85 - நாம், இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய நவீன இயக்கங்களை வெறுப்பதன் காரணம் என்ன?

86 - சூரத்துல் அஸ்ர்

87 - குறிப்பு

88 நபியே! நாயகமே! உங்களுடைய காலத்தின் மீது சத்தியமாக!

89 - சூரத்துல் ஹுமஸா

90 -  குறிப்பு

91 - வீடுகளில் இருந்து கொள்ளுங்கள்

92 - புறம் பேசாத இமாம் புகாரி

93 - நகைப்புக்காகப் பொய் பேசாதீர்கள்

94 - சூரத்துல் ஃபீல்

95 - குறிப்பு

96 - நபிகள் நாயகத்தின் பிறந்த ஆண்டை நினைவுகூரும் அத்தியாயம்

97 - சூரத்துல் குறைஷ்

98 -  குறிப்பு

99 - இலங்கையில் இஸ்லாம் தோன்றிய வரலாறு

100 -  மரக்கல மினிசுஎன்பதன் உண்மை நிலவரம்

101 - சூரத்துல் மாஊன்

102 - குறிப்பு

103 - “இல்லைஎன்று சொல்லக்கூடாத பொருள் என்ன?

104 - சூரத்துல் கவ்தர்

105 - குறிப்பு

106 - சிறந்த சந்ததி அற்ற, சீரழிந்த சமூகம்

107 - சூரத்துல் காஃபிரூன்

108 - குறிப்பு

109 - சகல இறைத் தூதுவர்களும் இஸ்லாமியர்களே

110 -  பைத்துல் முகத்தஸ் பள்ளியின் சொந்தக்காரர்கள் யார்?

111 - சூரத்துன் நஸ்ர்

112 -  குறிப்பு

113 நபியே! நாயகமே! உங்கள் சமூக மக்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்

114 - நபியே நாயகமே யா ரசூலல்லாஹ்! உங்களது இவ்வுலக வாழ்க்கை முடிவுறப் போகிறது

115 - நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்

116 - அல்-குர்ஆனின் அகமியம் அறிந்திட, அண்ணல் நபி நாயகத்தின் ஆசீர்வாதம் வேண்டும்

117 - அண்ணல் நபி நாயகத்தின் இவ்வுலகப் பிரிவும் அல்-குர்ஆனும்

118 - அகிலமெங்கும் அல்லாஹ்வின் அருள்

119 - சூரத்துல் லஹப்

120 -  குறிப்பு

121 -  சூரத்துல் இக்லாஸ்

122 - அண்ணல் நபியின் அகமியம் அறியாதவர் அல்லாஹ்வை அறிந்தவராக மாட்டார்

123 - அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுத் தருகிற அத்தியாயம்

124 அன்பியாக்கள், அவ்லியாக்களிடம் அடைக்கலம் தேடுங்கள்

125 - மார்க்கத்தை முறையாகக் கற்றுக் கொள்ளாதவர்களின் கருத்து

126 - சூரத்துல் ஃபலக்

127 - சூரத்துந் நாஸ்

128 - குறிப்பு

129 - நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா

130 - ஷைத்தானியக் கூட்டத்தின் கூற்று

 

கேரளா ஜாமிஆ மர்கஸ் ஸகாபதுஸ் ஸுன்னா தலைவர்,  சுல்தானுல் உலமா, இந்தியன் கிரேண்ட் முஃப்தி அல்-ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷைக் A.P. அபூ பக்கர் பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் அளித்த

 

வாழ்த்துரை

 

*********

 

ஹுஜ்ஜத் மாத இதழின் ஆசிரியர் மெளலானா, மெளலவி M. அப்துல் கரீம் அல்ஜீலி ஹழ்ரத் அவர்கள் வழங்கிய

 

வாழ்த்துரை

 

மனித சமுதாயத்தை நேர் வழி நடத்துவதற்காக இறைத் தூதர்கள் உலகிற்கு வந்தனர். இவ்விறைத் தூதர்களில் சிலருக்கு சட்ட-திட்டங்களை, வழி காட்டுதல்களை உள்ளடக்கிய வேத நூற்கள் அல்லாஹ்வால் அருளப்பட்டன.

 

இவ்வாறு அருளப்பட்ட வேத நூற்களில் இறுதியாக அருளப்பட்ட வேத கிரந்தமான அல்குர்ஆன், மனித சமூகத்தின் உன்னத வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளி விளக்காய் அமைந்துள்ளது.

 

‘குஃப்ர்’ எனும் அந்தகாரத்திலிருந்து மனிதனைக் கரையேற்றி ‘தவ்ஹீத்’ எனும் வெளிச்ச உலகிற்கு வழி நடத்துகிறது இறைமறை அல்குர்ஆன். குறைகளோ, கறைகளோ கடுகளவும் இல்லாத இத்திருமறை மனிதனின் இம்மை, மறுமை வாழ்வுக்கான அனைத்தையும் போதிக்கிறது.

 

அல்குர்ஆன் எனும் வேத நூல் போதனைகளை மட்டும் கொண்டதல்ல. ஆன்மீகத்தையும், அறிவியலையும், சட்ட திட்டங்களையும், வரலாறுகளையும், படிப்பினைகளையும், நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும், இன்னோரன்ன பிற வழி காட்டுதல்களையும் கொண்டுள்ள அல்குர்ஆனின் சிறப்புக்கள் மிக ஏராளம். அச்சிறப்புக்களை மனிதனால் எழுதித் தீர்த்து விடவோ, ஆய்வு செய்து முடித்து விடவோ ஒருக்காலும் முடியாது.

 

குர்ஆன் என்றால் ஓதக்கூடியது, ஓதப்பட்டது, ஓத வேண்டியது என்ற பொதுவான பொருளைக் கொண்டிருந்தாலும், பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருபத்தி மூன்று ஆண்டுகளாக அருள் செய்யப்பட்ட அல்குர்ஆனின் திரு வேதத்தை  மட்டும் சுட்டும் ஒரு பிரத்தியேகச் சொல்லாக ‘அல்குர்ஆன்’ என்ற சொல் அமைந்துள்ளது.

 

அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்: “அறபு மொழியில் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதும், தொடர் முறியாமல் நமக்கு கிடைத்ததும், முஸ்ஹஃபில் பதிவு செய்யப்பட்டதும், அல்ஃபாத்திஹா அத்தியாயத்தைத் தொடக்கமாகவும், அன்னாஸ் அத்தியாயத்தைக் கொண்டு நிறைவு பெறுவதுமான அல்லாஹ்வுடைய கலாம் அல்குர்ஆனாகும்” (நூல்  : அல்முஸ்தஃபா)

 

அறபு மொழி மிகத் தொன்மையானது. இலக்கண மேன்மையும், இலக்கியச் செறிவும், சொல் வளமும் மிகுந்த உயர்தர மொழி. மேலும் ஒரு சொல்லுக்கு பல பொருள்களைக் கொண்டது.

 

அறபு மொழி உலகியல் மொழி மட்டுமல்ல. சுவனத்தின் மொழியும் கூட. மேலும் எந்தவொரு மதத்திலும் இல்லாத ஒரு நிபந்தனை இஸ்லாமில் உண்டு. தொழுகைகள் மொத்தமும் அறபு மொழியிலேயே அமைந்திருக்க வேண்டும் என விதி செய்துள்ளது இஸ்லாம்.

 

மக்காவில் அறபுகளுக்கு மத்தியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றிய காலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர்.

 

ஆயினும், கவிதைகளும், காவியங்களும் படைக்கும் திறமை கொண்ட பிறவிக் கவிஞர்கள் ஏராளமானோர் வாழ்ந்தனர். போட்டியிட்டுக் கவிதைகளும், காவியங்களும் படைப்பதில் ஆர்வம் மிகக் கொண்டிருந்தனர்.

 

ஆண்டுதோறும் நடைபெறும் ‘உக்காழ்’ வணிக விழாவில் கவியரங்குகளும் கவிதைப் போட்டிகளும் தவறாமல் இடம் பெற்றன. வெற்றி பெறுபவர்கள் தமது கவிதைகளை தங்கத்தால் பட்டுத் துணிகளில் நெய்து கஃபதுல்லாஹ்வின் சுவரில் கட்டித் தொங்க விட்டனர். இக்கவிதைத் தொகுப்புக்கள் ‘முஅல்லகாத்’ என அழைக்கப்பட்டன.

 

 

இம்ரவுல் கைஸ், ஸுஹைர் பின் அபீ ஸல்மா, தர்ஃபத் இப்னு அப்த், அம்ர் இப்னு குல்தூம், அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸி, லுபைத் இப்னு அபீ ரபீஆ, ஹாரிஸ் இப்னு ஹல்ஸா ஆகிய ஏழு கவிஞர்களின் காவியப் படைப்புக்களான ‘ஸப்உ முஅல்லகாத்’ அறபு இலக்கியத்திற்கு அணி சேர்க்கின்றன.

 

அன்றைய அறபுக் கவிஞர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறை கூறி கவிதைகள் இயற்றி குறைஷிகள் மனதில் வன்மத்தை வளர்த்தபோது, ஹஸ்ஸான் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்ற முஸ்லிம் கவிப் பேரரசர்கள் பாடல்களாலேயே தக்க பதிலடி தந்து குறைஷிகளை வாயடைக்கச் செய்தனர்.

 

ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்களை வசப்படுத்தி வைக்கும் கலைகள் இருந்தன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இலக்கிய விற்பன்னர்கள் கோலோச்சினர். எனவே, அறபுக் கவிஞர்களும், பாவாணர்களும் வியக்கும் அளவுக்கு கருத்துச் செறிவும், சொல் வளமும், இலக்கிய நயமும் மிகுந்த அல்குர்ஆனை அறபு மொழியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருள் செய்து அறபுகளின் இலக்கிய கர்வத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தான் அல்லாஹ்.

 

அல்குர்ஆனுக்கு மறைவான, வெளிப்படையான பொருளும், கருத்துக்களும் உள்ளதால் அவற்றை நூறு சதவீதம் முழுக்க முழுக்க சரியான வடிவில் வேற்று மொழியாக்கம் செய்தல் சாத்தியமல்ல. அல்குர்ஆன் கூறும் செய்திகளின் கருத்துரைக்கலாம்.

 

எனவே, அல்குர்ஆனுக்கு தஃப்ஸீர் – விரிவுரையும், தஃவீல் – வலிந்துரையும் செய்பவர்கள்  பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டுமென இஸ்லாமிய அறிஞர் உலகம் நிபந்தனை விதித்துள்ளது.

 

முக்கியமாக அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுபவர்கள், மொழியாக்கம் செய்பவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கலப்பற்ற அகீதாவைக் கொண்டவர்களாக அமைந்திருக்க வேண்டும். அல்லாதவர்கள் தமக்கிசைந்தவாறெல்லாம் அல்குர்ஆன் வசனங்களுக்கு திரித்தும், புரட்டியும் பொருள் கூறி மக்களை வழி கெடுப்பர். நவீன குழப்பவாதிகள் இதைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

 

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்: “அல்குர்ஆனுக்கு சுய விருப்பப்படி விளக்கம் சொல்பவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்” அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். (நூல்: திர்மிதி)

 

சுயவிருப்பப்படி விளக்கம் சொல்தல் என்றால்: “ஷரீஅத் சட்ட வரம்புகளைப் பற்றிய ஞானமுள்ள அறபு  மொழி இயலில் அறிவு படைத்த இமாம்களுடைய விளக்கங்களைப் பின்பற்றாமல் சுய சிந்தனை, சுயவிருப்பப்படி பொருள் கொள்தல் என்பதாகும்.” (நூல்: திர்மிதியின் விரிவுரை துஹ்பத்துல் அஹ்வதி)

 

 

“சுயவிருப்பப்படியோ, (அல்குர்ஆன் விளக்கம் குறித்த) அறிவில்லாமலோ அல்குர்ஆனுக்கு விளக்கம் சொல்பவன் தனது இருப்பிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்ற ஹதீதின் அடிப்படையில், “சொந்த அபிப்பிராயப்படி அல்குர்ஆனுக்கு விளக்கவிரை செய்தல் ஹராம் ஆகும்.” (நூல்: தஃப்ஸீர் இப்னு கதீரின் முன்னுரை)

 

மேற்சொன்னவை அல்குர்ஆனுக்கு – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களும், இமாம்களும் கற்றுத் தந்த விளக்கங்களை ஏற்று அவர்களை வழி காட்டியாகக் கொண்டு விளக்கம் கூற வேண்டும், பொருள் சொல்ல வேண்டும், மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

 

அந்த வகையில் ஸெய்யித் வம்சத்தைச் சார்ந்தவர்களும், இலங்கை அல்ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அறபுக் கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான கண்ணியத்துக்கும் மரியாதைக்குமுரிய ஷம்சுல் ஆரிஃபீன், அபுல் கைராத், ஃபழீலத்துஷ் ஷெய்க், அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மெளலான குஷ்ஹாலீ, அர்ரிஃபாயீ, சர்கார், தாமத் பரகாதுஹு அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை வழி நின்று திருக்குர்ஆனின் முப்பதாவது பாகத்தின் முப்பத்தேழு அத்தியாயங்களையும் தமிழில் மிக அருமையாக மொழிக்யாகம் செய்து தந்துள்ளார்கள்.

 

வசனங்களின் மொழி பெயர்ப்புக்குப் பின்னூட்டங்களாகத் தந்திருக்கும் அற்புதமான விளக்கங்களும், குறிப்புக்களும், அறிவியல் செய்திகளும் ஷெய்க் அவர்களின் ஆழிய ஞானத்தையும், பேரறிவையும் எடுத்தியம்புகின்றன.

 

இந்நூல் அன்னாரின் ஐம்பதாவது வெளியீடாகும். அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்துக்காக அல்லும், பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஷெய்க் அவர்களின் மார்க்கப் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! சமுதாயப் பணியில் அவர்களின் பயணம் தங்கு தடையின்றிச் சென்றிட பூரண நலத்தையும், நீண்ட ஆயுளையும் அல்லாஹ் வழங்கியருள் புரிவானாக!! ஆமீன்.

 

M. அப்துல் கரீம் அல்ஜீலி

பிபிஎஸ் புரம், குமரி மாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா.

 

 

 

சென்னை நாஸிருஸ் ஸுன்னா கல்வி நிறுவனத்தின் தலைவர், பன்னூலாசிரியர் மெளலானா, மெளலவி அல்-ஹாஜ் U. முஹம்மது சலீம் ஸிராஜி  ஹழ்ரத் அவர்கள் வழங்கிய

 

வாழ்த்துரை

 

அருளாளன் அல்லாஹ்வின் அருட் திருநாமத்தால். அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் மீது ஸலாமும் ஸலவாத்தும் உரைத்து, அல்லாஹ்வின் அருள்மறை அல்-குர்ஆனுக்கு பல்வேறு தமிழ் தர்ஜமாக்கள் கிடைக்கின்றன. இன்றைய கால கட்டத்தில் வழிகேட்டில் நாம் அறியாமலேயே நம்மை இழுத்துச் செல்லும் நவீன குழப்பவாதிகளால் எழுதப்பட்ட தர்ஜமாக்களும் அவற்றுள் உள்ளன. அவர்களால் எழுதப்பட்ட தர்ஜமாக்களை வாசித்தால் நம்மை ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். அவற்றை வாசிப்பதற்கு முன் அவை யாரால் எழுதப்பட்டவை? எழுதியவர் எந்த கொள்கைப் பிரிவைச் சார்ந்தவர்? என்பதைக் கவனமுடன் பரிசீலித்த பின்னர் வாங்கவும், வாசிக்கவும் வேண்டும்.

 

நம்முடைய சிறீலங்கா, புத்தளம், மதுரங்குளியில் அல்-ஜாமிஅத்துல் அஸீஸிய்யா எனும் அறபிக் கல்லூரியை நிறுவி, மிகுந்த சிறப்புடன் நடத்தி வருகின்ற ஷம்சுல் ஆரிஃபீன், அபுல் கைராத், ஃபழீலத்துஷ் ஷெய்க், அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மெளலான குஷ்ஹாலீ, அர்ரிஃபாயீ, சர்கார், தாமத் பரகாதுஹு அவர்கள் பேரறிஞரும், பெரும் ஞானியும், தரீக்கா ஷெய்கும் ஆவார்கள். சிறீலங்கா, இந்தியா, பாகிஸ்தான், அரபு நாடுகள் என உலகின் பல்வேறு பகுதிகளில் அவர்களின் முரீதுகள் பெருமளவில் வாழ்கின்றனர்.

 

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழித்தோன்றலான, ஸெய்யித் வம்சத்தைச் சார்ந்தவர்களான ஷெய்கு நாயகம் சர்க்கார், தாமத் பரகாதுஹு அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் வழி நின்று அல்குர்ஆனின் முப்பதாவது பாகத்தின் முப்பத்தியேழு அத்தியாயங்களையும் எல்லோருக்கும் புரியும் வகையில் அழகுத் தமிழில் மிக அற்புதமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார்கள். தேவையான இடங்களில் விளக்க உரைகளையும், அறிவியல் குறிப்புக்களையும், அல்குர்ஆனின் முன்னறிவிப்புக்களையும் எழுதியுள்ளார்கள். இம்மொழி பெயர்ப்பு நூலுக்கு அன்னார் விரிவாகவும் தெளிவாகவும் எழுதியுள்ள முகவுரை பல்வேறு தகவல்களை உள்ளடக்கி மிக அற்புதமாக அமைந்துள்ளது.

 

ஷெய்குனா, சர்கார், தாமத் பரகாதுஹு அவர்கள் இந்நூல் தவிர ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கைகளை ஆணித்தரமான ஆதாரங்களோடு விளக்கும் வகையில் பல்வேறு தலைப்புக்களில் நூற்கள் பல எழுதியுள்ளார்கள்.    இந்நூல் அவர்களின் ஐம்பதாவது வெளியீடாகும்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ், ஷெய்குனா, தாமத் பரகாதுஹு அவர்கள் ஸுன்னத் வல்ஜமாஅத்துக்கு ஆற்றி வரும் மார்க்கப் பணிகளை கபூல் செய்வானாக! மேலும் நூற்கள் பல எழுதி சமுதாயத்துக்கு வழி காட்டிட அவர்களுக்கு நிறைவான நலத்தையும், நீண்ட ஆயுளையும் அருள் பாலிப்பானாக! அப்பெருமகனாரின் துஆ பரக்கத்தால் நம் அனைவருக்கும் சகல விதமான செளபாக்கியங்களையும் தந்தருள்வானாக!

 

U. முஹம்மத் சலீம் ஸிராஜி

சென்னை.

 

அகமியம் பொங்கும் அல்லஃபல் அலிஃப் புகழ் மற்றும் பன்னூல் ஆசிரியர், இலங்கை கஹடோவிட அல்-பாதிபிய்யா அரபிக் கல்லூரி முதல்வர், மதிப்புக்குரிய அல்-உஸ்தாத் மெளலவி A. முஹம்மது ஜவாஹிர் ஜல்வதீ ஃபலகீ ஹழ்ரத் அவர்கள் அளித்த
 
வாழ்த்துரை
 

بسم الله الرحمن الرحيم

 

 

எனது அன்பிற்கினிய தீனுடைய சகோதரர்களே.  அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

.

மகா மேன்மைக்கும், சங்கைக்கும் உரித்தான ஷெய்குனா, சர்கார், நாயகம் குஷ்ஹாலி ஹபிழஹூல்லாஹ்  அவர்கள் அம்ம ஜூஸ்வை முழுமையாக தமிழாக்கம் செய்து "தர்ஜமதுல் குர்ஆன் பிஅஸீஸில் பயான்" என்ற பெயரில் வெளியிட்டிருக்கும் இந்நூலை ஆரம்பம் முதல் இறுதிவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தை இறைவன் எமக்கு அளித்த பெரும்  பாக்கியமாகக் கருதுகின்றேன்.

 

இந்நூல் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் அகீதா அடிப்படையில் அமைக்கப்பட்ட திருமறைத் தமிழாக்கம் என்று சங்கைக்குரிய சர்கார் நாயகம் ஹபிழஹூல்லாஹ் அவர்கள் இதன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போன்று அங்காங்கே அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத்தின் அகீதாக்களை எடுத்துக் கூறுகின்ற பல விஷயங்களைக் கண்டு பேரானந்தம் அடைந்ததுடன் அவைகளை சங்கைக்குரிய  சர்கார் நாயகம் ஹபிழஹூல்லாஹ் அவர்களிடம் குறிப்பிட்டுக்காட்டி என் மன மகிழ்வையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டேன்.

 

சங்கைக்குரிய சர்கார் நாயகம் ஹபிழஹூல்லாஹ் அவர்கள், "தப்ஸீர் ஆயத் அந்நூர்" என்ற பெயரில் பல ஞான இரத்தினங்களையும் மார்க்க மஸாயில்களையும் அறிவார்ந்த கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய பெரிய நூலை ஏற்கனவே  வெளியிட்டு இருந்ததை போல  இந்த தர்ஜமாவிலும் சீரிய கருத்துக்களையும் சிறந்த விளக்கங்களையும் எளிய நடையில் படிப்போருக்கு  சளிப்பு தட்டாத வகையில் அமைத்திருக்கின்றார்கள்.

 

அத்துடன் தக்வாதாரி௧ளா௧  தாங்களை வெளிக்காட்டும் வேடதாரிகளின் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டிருப்பதுடன் அவர்களுடைய தலைவர்களின் தந்திரமான போக்குகளையும் தோளுருத்திக் காட்டிருக்கின்றார்கள். அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாத்தைச் சார்ந்த  சீதேவிகள் தாங்களின் கொள்கையில் ஸ்திரமாக காலூன்றி நிற்பதற்குத் தேவையான  வளமான விளக்கங்களையும் பலமான ஆதாரங்களையும்  உள்ளடக்கி இருக்கின்ற இந்நூலையும், இதற்கு முன்பு அவர்களின் பொற்கரங்களால் பொறிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட அகீதா நூல்களையும் எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுத்தஆலா கபூல் செய்து இவ்வவனியோர்  யாவரும் அவைகளைப் படித்து பயனடைய கிருபை செய்ததைப் போன்று இந்த  அம்மஜூஸ்வின் தமிழாக்கத்தைத்  தொடர்ந்து மாமறை முழுவதையும் மொழிபெயர்க்க வேண்டும் என்ற நோக்கில் முழு மூச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவர்களின் எழுத்துப் பணியை கபூல் செய்வதுடன் அவர்களின்  திருக்கரத்தால் எழுதப்படுகின்ற ஏனைய பாகங்கள் யாவும் விரைவாக வெளியிடப்படுவதற்கும், அதற்கான அருள், பொருள், ஆரோக்கிய பலத்துடன் ஆயுள் பலமும் பெற்று, அவர்கள் நீண்ட காலம் மார்க்கச் சேவையாற்றுவதற்குவதற்கும்  கிருபை செய்வானாக!  ஆமீன் பிஜாஹி செய்யிதில் முர்ஸலீன் என்று வேண்டி என் அணிந்துரையை  நிறைவு செய்கின்றேன்.                      

 

 வஸ்ஸலாம்

 

 

அபுதாபி, ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மதிப்புக்குரிய அல்-ஆலிமுல் ஃபாழில் அல்-ஹாஜ் S.M.B. ஹுஸைன் மக்கி மஹ்ழரி ஹழ்ரத் அவர்கள் வழங்கிய

 

 

வாழ்த்துரை

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 

புகழ் அனைத்தும் படைத்துப் பராமரிக்கும் பராபரனுக்கே உரித்து. அல்ஹம்துலில்லாஹ். படைப்பினங்களின் நாயகமாய், படைத்தோனின் நூராய், பரிணமித்த பாச நபி நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆசிகளோடும், அகிலமெங்கும் ஆண்டவனின் அடையாளச் சின்னமாய் திகழ்ந்து, புனித மண்ணறையில் வாழும் இறை நல்லடியார்களின் இனிய துஆ பேற்றினாலும், எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய், அண்ணல் நபியின் அருமந்த வாரிசாய், வந்துதித்த எங்கள் ஆன்மீக குருநாதரின் அருளாசிகளோடு துவக்கம்.

 

தங்களின் கரம் தவழும் இந்நூலின் ஆசிரியர் எங்களின் ஆன்மீகத் தந்தை அவர்கள் இலங்கை மா நகரில் ஈருலக கல்வியைப் போதிக்கும் நிறுவனத்தை தங்கும் விடுதி வசதிகளுடன் நிறுவி, கல்வி கற்றிட முடியாத எண்ணற்ற எத்தீம்களின் வாழ்வில் ஒளியேற்றி, ஆலிம்களாக, ஆலிமாக்களாக, ஹாபிழ்களாக, ஹாபிழாக்களாக, இன்னும் உலக கல்வியில் இளநிலை, மேல்நிலை, பட்டப்படிப்பில் பட்டயம் பெற்றவர்களாக முப்பது வருடங்களுக்கு மேலாக மிகச்சிறப்பாக நடாத்தி வருகிறார்கள்.

 

எங்கள் ஆன்மீக குருநாதரின் ஞானக்கருவூலமாய், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கையை விளக்கும் எண்ணற்ற அற்புதமான நூட்கள் காலத்தின் அவசியம் கருதி மலர்ந்தன.

 

மலர்ந்தவைகள் அனைத்தும் மணம் வீசி மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து மாற்றங்களை கண்டதுடன், நமது கொள்கையை சுரண்டிப்பார்க்கும் சுயநலவாதிகளின் கருத்துக்களுக்கு அவ்வப்போது வெளிவந்த நூட்கள் அனைத்தும் அரணாகக் காத்து நின்று பதில் கூறின.

 

அதன் தொடர்ச்சியாக, எங்களின் நீண்ட நாள் அவாவும், காலத்தின் தேவையுமாக, நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படை கொள்கையில் அமையும் மிகத்தெளிவான விளக்கத்தை சுமந்து தர்ஜமதுல் குர்ஆன் பி அஸீஸில் பயான் ஒவ்வொரு பாகங்களாக வெளிவர இருக்கிறது. அதை ஆதி முதல் நிறைவுப்பகுதி வரை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். மிக சிறப்பாக அமையப் பெற்றிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

 

அவசியம் அந்நூல் நமது இல்லங்களையும், உள்ளங்களையும், பரிசுத்தப்படுத்தி மேன்மக்களாய் உயர்ந்திட செய்யும். வாங்கி, படித்து, பாதுகாத்து பயன் பெறுவோம், பயன் பெறச் செய்வோம். குறிப்பாக மத்ரஸா பயிலும் மாணாக்கர்களுக்கு மிகத்தேவையானது. காரணம்: நமது கொள்கையை மிகத் தெளிவாக விளங்கி நடக்கும் ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

 

இறைவா! எங்கள் ஆன்மீக குருநாதரின் இந்த முயற்சி பூரணம் பெற அவர்களுக்கு பூரண தேக நலனையும், நீடித்த ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும், நில்லாது நீடித்து அருள்வாயாக! ஆமீன்.

 

 

S.M.B.ஹுஸைன் மக்கி, மஹ்ழரி

தலைவர், அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை,

அமீரகம்.

 

 

 

இலங்கை, ஜம்இய்யது இஷாஅத்தி அஹ்லிஸ் ஸுன்னா

உலமா சபை அளித்த

 

வாழ்த்துரை

 

 

الحمد لله الذي أنعم على الوجود بأعظم نعمة سيدنا ونبينا وشفيعنا وملاذنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وهذه النعمة لا يراها إلا ذو بصيرة قد شرح الله صدره أو مضطر قد كشفت له الضرورة الغطاء فأبصر بعد عماء وسعد بعد شقاء

 

 

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

 

“நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னர்) துரத்தப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடிக் கொள்ளுங்கள். (சூரத்துந் நஹ்ல், வசனம் 98)

 

துரத்தப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடிக் கொண்டவர்களாக நீங்கள் அல்குர்ஆனை ஓத ஆரம்பிப்பதுபோன்று, அதனை ஓதி முடிக்கும் சந்தர்ப்பத்திலும் அவனின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால், அல்குர்ஆனின் இறுதி இரு அத்தியாயங்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன என்று சொன்னால், அது பிழையாகாது. காரணம், குர்ஆனின் பெயரில் ஷைத்தானின் சினேகிதர்களின் சதி வலையில் சிக்கி நாம் சீரழிந்து விடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம் உண்டு.

 

அல்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றுக் கொள்வதாக இருப்பினும் சரி, அதனை அண்ணல் நபி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களினூடாக, அகமும் புறமும் சுத்திகரிக்கப்பட்ட சிறந்த அறிஞர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது அப்படிப்பட்டோரின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டோரிடமிருந்து படித்துக் கொள்ளுங்கள். அதற்காக, ஷைகுமார்களின் சகவாசத்தைச் சேமித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சதி கோட்பாடுகள் சூழ்ந்து கொண்டதொரு காலத்தில் உள்ளோம் என்பதை உணருங்கள்.

 

அல்குர்ஆன், அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் அஹ்மது முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் நலன் கருதி, அதாவது அண்ணலாரின் அகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு கொஞ்சம் கொஞ்சமாகவும், அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும் அருளப்பட்டு வந்தது.

 

இவ்வாறு அருளப்பட்டு வரும் காலத்தில், நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் கற்றுக்கொடுத்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களைச் சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட  அத்தியாயத்தில் எந்த இடத்தில் வரவேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப்பட்டதுதான், இக்காலத்திலும் நம்மிடமிருக்கும் திருக்குர்ஆன்.

 

இந்த ஒழுங்கு முறைக்குதவ்கீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப்பட்டது) என்றும், “தர்தீபுத் திலாவத்தி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்த்தீபுர் ரஸூலி (ரசூலுடைய வரிசை) என்றும்  கூறப்படும். ஆனால், இதே ஒழுங்கு முறைப்படி திருக்குர்ஆன் இறக்கப்படவில்லை. இதில் முன்னுள்ள அத்தியாயங்கள் பின்னரும் பின்னுள்ள அத்தியாயங்கள் முன்னருமாக இறக்கப்பட்டுள்ளன. அந்த ஒழுங்கு முறைக்குதர்த்தீபுந் நுஸூலி” (அருளப்பட்ட வரிசை) என்று கூறப்படுகிறது.

 

மார்க்கத்திலுள்ள சட்ட திட்டங்கள் எவ்வாறு படிப்படியாக மாற்றத்திற்குள்ளானது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவோர்தர்த்தீபுந் நுஸூலியை தெரிந்து கொள்வது முக்கியம்.

 

ருகூஉஎன்றால் என்ன?

 

திருக்குர்ஆனின் பிந்திய பகுதிகளில் உள்ள 35 சூராக்களைத் தவிர, மற்ற சூராக்கள்தொழுகையின் சாதாரண ஒரு ரகஅத்தில் ஓதுவதற்குத் தோதுவான அளவில்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதற்குருகூஉ’ (அதாவது, “மாயுக்ரஉ ஃபிர் ரகஅதிதொழுகையிலுள்ள ஒரு ரகஅத்தில் ஓதக்கூடியது) என்று சொல்லப்படும். இந்த வகையைக் குறிக்க ஆங்காங்கேஅய்ன்அடையளாமிடப்பட்டிருக்கும். அந்தஅய்ன்உடன் குறிப்பிடப்பட்டிருக்கும் எண், அந்த சூரத்தில் அது எத்தனையாவதுருகூஉஎன்பதற்கான அடையாளமாகும். பெரும்பாலும் தொழுகையில் அதுவரை ஓதிய பிறகு ருகூவிற்கு குனிவதால் ‘ருகூஉ என்று பெயர் வந்தது

 

மக்கீமதனீ

 

திருக்குர்ஆன் அருளப் பெற்று 23 ஆண்டுகளில், நபிகள் பெருமானார் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், முதல் பதின்மூன்று ஆண்டுகள் மக்காவிலும், பிந்திய பத்தாண்டுகள் மதீனாவிலும் வாழ்ந்திருந்தார்கள்.

 

அவர்கள் மக்காவில் வாழ்ந்த 13 ஆண்டு காலத்தில் மக்காவிலும், அதையடுத்து அவர்கள் சென்றிருந்த மற்றைய இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு மக்கீ” (மக்காவில் அருளப் பெற்றவை) என்றும், அவர்கள் மதீனாவில் வாழ்ந்த 10-ஆண்டு காலத்தில் மதீனாவிலும், அதையடுத்து அவர்கள் சென்ற மற்ற இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு மதனீ” (மதீனாவில் அருளப் பெற்றவை) என்றும் கூறப்படும்.

 

திருக் குர்ஆனில் உள்ள மொத்த அத்தியாயங்களில் 86 “மக்கீஅத்தியாயங்களும், 28 “மதனீ” அத்தியாயங்களும் இருக்கின்றன. இவ்வாறு பொதுவாகவே அத்தியாயங்களை மக்கீ” “மதனீஎன்று பிரித்து குறிப்பிட்ட போதிலும், “மதனீஅத்தியாயங்கள் சிலவற்றில், “மக்கீகாலத்து வசனங்களும் மக்கீஅத்தியாயங்கள் சிலவற்றில் “மதனீ” காலத்து வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

 

பொதுவாக, இவற்றில் மக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள், இறை நம்பிக்கை, ஒற்றுமை, இறப்பு, வாழ்வு, சுவர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும்மதீனாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள், இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.

 

குர்ஆனை பிற மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்ய முடியுமா?

 

அரபு மொழியில் இருக்கும் குர்ஆன் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இஸ்லாமிய நம்பிக்கையின் காரணமாக, குர்ஆனை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் ஹழ்ரத் ஸெய்யிதுனா உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால்  தொகுக்கப்பட்ட குர்ஆன், பழைய அறபு மொழியைக் கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.

 

இருப்பினும் நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. ஹழ்ரத் ஜஃபர் பின் அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு என்பவரால், ‘மர்யம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் “அங்காரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

 

அங்காரியம் என்பது அறபு மொழிக்கு அடுத்ததாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் செமித்திய மொழியுமாகும். எதியோப்பியாவின் ஆட்சி மொழியாகும். கேயெஸ் எழுத்துமுறையால் எழுதப்பட்ட இம்மொழியை மொத்தத்தில் கிட்டத்தட்ட 17 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். அவ்வாறே ஹழ்ரத் சல்மான் ரழியல்லாஹு அன்ஹு என்பவரால் குர்ஆனின் முதல் அத்தியாயமான அல் ஃபாத்திஹா பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

 

சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லாஹ் பின் உமர் என்பவரின் தலைமையில் எழுதப்பட்டதே குர்ஆனின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும். ஆயினும் இது எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் இலத்தீன் மொழியில், குர்ஆன் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து டச்சுபிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. முதல் ஆங்கில குர்ஆன் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.

 

அரபுத் தமிழ், குர்ஆன் மொழிபெயர்ப்பு

 

இலங்கைத் திருநாட்டின் பேருவளையைச் சேர்ந்த நபவிய்யத்துல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவர் அல்-ஆலிமுல் ஃபாழில், அஷ்ஷெய்கு, முஸ்தஃபா நாயகம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், “ஃபத்ஹுர் ரஹ்மான் ஃபீ தர்ஜமதித் தஃப்சீரில் குர்ஆன்” என்ற பெயரில் அறபுத் தமிழில் எழுதியிருந்தார்கள். இது 1875ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. முழுக் குர்ஆனும் அரபுத் தமிழில் எழுதப்பட்டிருந்த போதிலும் ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே அச்சுருவில் வெளி வந்ததன.

 

அவ்வாறே 1897 ஆம் ஆண்டளவில் அஷ்ஷைக் சுலைமான் இப்னு முஹம்மது அஸ்ஸைலானி அவர்களால் எழுதப்பட்ட ஒரு சில அத்தியாயங்கள், ‘ரஹ்மத்துல் மன்னான் அலல்முதஅல்லிமீனல் வில்தான்என்னும் பெயரில் அறபுத் தமிழில் பிரசுரமாகியுள்ளது.

 

தூய தமிழில் குர்ஆன் மொழிபெயர்ப்பு

 

தூய தமிழ் மொழியிலான குர்ஆன் மொழிபெயர்ப்பு முதன் முதலில்  1943 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இது, ஹழ்ரத் அப்துல் ஹமீத் பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பவரால் எழுதப்பட்டது.

 

தொடர்ந்து, முஹம்மது ஸ்ஸான் என்பவரால் 1983ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல வழி கெட்ட அமைப்புகள் மற்றும் பதிப்பகங்களினால் குர்ஆனின் தமிழாக்கங்கள் தாராளமாக வெளியிடப்படுகின்றன.

 

இம்மொழிபெயர்ப்பின் சிறப்பியல்பு

 

குர்ஆன் என்பது, கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் குணத்தை வெளிப்படுத்தி வைக்கும் சாதனமாகும். “குணம் என்ற வார்த்தைக்கு மார்க்கம் என்றதொரு பொருளும் உண்டு. அந்த வகையில், கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் யார்? அவர்கள் பிறந்ததன் நோக்கம் என்ன? என்பன போன்ற அம்சங்களை அறிவித்துக் கொண்டிருக்கும் அற்புத நூல்தான், அல்குர்ஆன் ஆகும்.

 

அதனால், அருமை நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கும், அவர்களின் இறைவன், மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் ஆகிய அனைவரின் விடயங்களிலும் மிகக் கவனமான முறையில் கருத்துக் கூறப்பட்டிருப்பது இம்மொழி பெயர்ப்பின் சிறப்பம்சமாகும். அத்துடன், ஆங்காங்கே அறிவியல் குறிப்புக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

 

குர்ஆனும் அறிவியலும்

 

கடல் மட்டம் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக வேகமாக உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதையடுத்து உலகின் அனைத்து நீர் நிலைகளும், சமுத்திரமும் உயர்ந்து வருவதாக நாசா உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் கண்டறிந்திருக்கின்றன.

 

உலகின் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘நேச்சர்’ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் கடற்கரையோர நகரங்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 2000 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை ‘நாசா’ நடத்திய ஆய்வில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்கா தவிர்த்து ஏனைய பகுதிகளில் ஆண்டுக்கு சுமார் 267 ஜிகா டன் அளவிற்கு பனிப்பாறைகள் உருகுவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த அளவு இன்னும் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் பனி உருகுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

முன்னரே உரைத்த குர்ஆன்

 

சமீபத்திய இந்த விஞ்ஞான ஆய்வுகள் நமக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் ஒரு பக்கம் தந்தாலும், இவற்றைக் குறித்து திருமறை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே உரைத்திருக்கும் பேரதிசயத்தைத் தற்போது நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.” (குர்ஆன் 13:41)

 

நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்படுவதாலும், நீர் நிலைகளின் மட்டம் உயர்வடைந்து அவை நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதாலும் நிலத்தின் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்கிற நுணுக்கமான ஆய்வுகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு யாரும் அறிந்திருக்க முடியாது. ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப்பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருப்பதன் மூலம் திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தை என்பது நிரூபணமாகின்றது.

 

யா அல்லாஹ்! உனது உரையாடலான அல்குர்ஆனை ஓதுகின்றோம். அதற்கு விளக்கமளிக்கின்றோம். அதனை ஆய்வு செய்கின்றோமென்ற பெயரில், உனது ஹபீபான கருணை நபி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களையும் அவர்களின் அருமைத் தோழர்களையும் வலிமார்களையும் அவமதிக்கும் அநியாயக்காரக் கும்பலான வழிகெட்ட சந்ததிகளின் போலியான விளக்கங்களில் இருந்து எங்களையும் எம் எதிர்கால சந்ததிகளையும் மற்றும் மாணவ, மாணவிகளையும் பாதுகாத்தருள்வாயாக!  ஆமீன் பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு  அலைஹி வஆலிஹி வஸல்லம்.

 

 

لطيف الذوق ذاق الحب معنــــى

وعار الذوق صاغ الحب منعــــا

وكل في محبته بحــــــــــــــــــظٍ

سوى المحروم ذاق الشهد لسعا

 

ஜம்இய்யத்து இஷாஅதி அஹ்லிஸ் ஸுன்னா

புத்தளம், இலங்கை.

 

 

என் கருத்து

 

بسم الله الرحمن الرحيم

 

الحمد لله رب العالمين كفاء حقه والحمد لله الذي أقام الحجة على  جميع خلقه والحمد لله الذي اصطفى من شاء من خلقه واجتبى من الأمم لشرعه وهدايته والحمد لله الذي هدانا لدينه وعبادته وخدمة وحيه وشرعته والحمد لله الذي أقام من الكائنات أدلة وجوده ومن الجمادات أدلة قدرته وإرادته وفى خلقه بيان تصرفه وفعله  والحمد لله الذي علم الانسان ما لم يعلم والحمد لله الذي خصنا بالنبي الأمي والرسول المكي المدني الذي جعله خير عباده من مخلوقاته فى أرضه وسمواته صلوات الله وسلاماته عليه وعلى آله وصحابته وأتباعه وإخوانه كلما ذكره الذاكرون وغفل عن ذكره الغافلون

 

 

அல்லாஹ்வின் பேரருளான பெருமானார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் யார்? அவர்களின் “குணம் – மார்க்கம்” என்ன? என்பதை அவர்களின் பாஷையில் இறக்கப்பட்ட அல்லாஹ்வின் பேச்சான திருக்குர்ஆனுக்குப் பணியாற்ற வேண்டுமென்ற எமது மிக நீண்ட கால பேராசையின் முதல் கட்டப் பணி நிறைவேறுவதற்கு வாய்ப்பளித்த வல்லோனை வாழ் நாள் முழுவதும் வாழ்த்திப் புகழ்கின்றோம். அண்ணல் நபி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத், ஸலாம் சொல்கின்றோம். அல்-ஹம்து லில்லாஹ்.

 

திருக்குர்ஆனுடைய முழுப் பகுதிகளும் சிறப்பாக முழுமை பெற உங்கள் எல்லோரின் பிரார்த்தனைகளையும் அழகிய வழிகாட்டல்களையும் எதிர்பார்த்தவர்களாக ஆரம்பம் செய்கின்றோம். அல்-ஹம்து லில்லாஹ்.

 

 

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ

 

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது. அது (நல்லது, கெட்டதைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெள்ளத்தெளிவாக்கக்கூடிய அத்தாட்சிகளைக் கொண்டதாகவும் உள்ளது.”  (சூரத்துல் பகறா வசனம் 185)

 

நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை லைலத்துல் கத்ரில் (மகத்துவமிக்க இரவில்) இறக்கி வைத்தோம். (சூரத்துல் கத்ரி வசனம் 01)

 

திருக்குர்ஆன் ரமழான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் லவ்ஹுல் மஹ்ஃபூழில் இருந்து முதல் வானத்திலுள்ள பைத்துல் இஸ்ஸாவுக்கு மொத்தமாக இறக்கப்பட்டது.  பின்னர் பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட இறைவன், அதனை 23 ஆண்டு காலப் பகுதிக்குள் பகுதி பகுதியாக இறக்கி வைத்து அருள் புரிந்தான்.

 

திருக்குர்ஆன் குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. அது முழு மனித சமூகத்திற்குமானது வெறுமனே மனித சமூகத்திற்கு மட்டும் சொந்தமானதுமல்ல. மாறாக ஜின் சமூகத்திற்கும் அது சொந்தமானது. திருக்குர்ஆன் மட்டும் ரமழான் மாத்தில் இறக்கப்பட்ட வேத நூல் அல்ல.  மாறாக சகல வேத நூல்களும் ரமழான் மாதத்திலேதான் இறக்கப்பட்டிருக்கின்றன.

 

திருக்குர்ஆன் என்பது வெறும் மார்க்கம் தொடர்பான தகவல்களைக் கொண்டதொரு மார்க்கம் சார்ந்த நூல் அல்ல. வானியல், புவியியல், மருத்துவம், பெளதிகம், இரசாயனம், அரசியல், பொருளாதாரம், விவசாயம், எண் கணிதம், திரிகோண கணிதம், கேத்திர கணிதம், அட்சர கணிதம் என மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து அம்சங்களுக்கும் அல்-குர்ஆனில் வழிகாட்டல் உண்டு. யார், எப்பொழுது, எதைக் கண்டுபிடித்தாலும் அதற்கான வழிகாட்டல் திருக்குர்ஆனில் நிச்சயம் இருக்கும். காரணம்,

 

هدى للناس

 

“(அல்-குர்ஆன்) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் வேத நூலாகும்.” என்று அல்-குர்ஆன் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. (சூரத்துல்  பகறா வசனம் 185)

 

 

நவீன அறிவியலானது மிகத் துல்லியமான உபகரணங்களின் துணைகொண்டு கண்டுபிடித்து வரும் சகல ஆய்வுகளுக்கும் அல்குர்ஆனில் வழி காட்டல் உண்டு. அல்-குர்ஆன் எடுத்துக்கூறும் ஏராளமான பிரபஞ்ச  உண்மைகளில் மிகவும் சொற்பமான அளவையே நவீன விஞ்ஞானம் இன்று புரிந்து கொண்டுள்ளது.

 

நோயாளிகளுக்கான சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையை நிறுவிய பெருமை, கலீஃபா ஹாரூன் ரஷீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைச் சாரும். ஆண்களுக்கான தனிப் பிரிவும் பெண்களுக்கான தனிப் பிரிவும் ஆண்கள் பிரிவில் கடமையாற்ற ஆண் தாதிகளும், பெண்கள் பிரிவில் பணியாற்ற பெண் தாதிகளும் அதில் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், விஞ்ஞானக்கலை அப்பாஸியர் காலத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்டது.

 

 

ஜாபிர் பின் ஹய்யான், அபூ ஸயீத் அல் அஸ்மயீ, இப்னுல் லதீஃப் அல் பக்தாதி, அல் கஸ்னவி போன்றவர்கள் தாவரவியல் பற்றிய ஆய்வில் பங்காற்றிய முஸ்லிம் அறிஞர்களாகும்.

 

ஹிஷாம் அல்-கல்பி, அல்குவாரிஸ்மி, சுலைமான் தாஜிர், அல்மஸ்ஊதி, அல்பிரூனி, அல்முகத்தஸி, இப்னு ஷஹ்ரயார், அல்யஃகூபி, அல் இத்ரீசி, இப்னு குர்தாபிஹ் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் புவியியல் துறையில் பிரபல்யம் பெற்ற அறிஞர்களாகும்.

 

அபுல் வஃபா, அல்-பதானி, அல்-பர்ஹானி, ஜாபிர் பின் அப்தில்லாஹ், நஸ்ருத்தீன் தூஸி, அபுல் ஃபிதா போன்ற முஸ்லிம் அறிஞர்கள்  வானவியல் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பினை சர்வதேச வானவியலாளர்கள் பெருமையுடன் பாராட்டிப் பேசுகின்றனர்.

 

அர்ராஸி, இப்னு ஸீனா, இப்னு நபீஸ், அஸ்ஸஹ்ராவி, ஹுனைன் பின் இஸ்ஹாக் ஆகியோர் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முஸ்லிம் மருத்துவ மேதைகளாகும். முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பிய மருத்துவர்களால் பின்பற்றப்பட்டிருக்கின்றன.  

 

தடுப்பூசியை கண்டுபிடித்தவர் என்று சொல்லப்படும் பிரிட்டனைச் சேர்ந்த எட்வர்ட் ஜென்னர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, பெருகியிருந்த அம்மை நோய்க்கு பல வடிவங்களில் தடுப்பு முறைகளை கையாண்ட பாரம்பரியம் கீழைத்தேய மருத்துவ மரபிற்கு இருக்கிறது.

 

அதில் ஒன்று அம்மை நோய் காயத்திலிருந்து பாலை குத்தி எடுத்து பிள்ளைகளுக்கு செலுத்தும் முறை. இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வந்த சிகிச்சை முறை.

 

ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் யுரேசியா பகுதியான துருக்கி கான்ஸ்டான்டி நோபிளில் அதாவது அன்றைய உதுமானிய கிலாஃபத்திற்குட்பட்ட கிராமங்களில் கூட இந்த அம்மைநோய் தடுப்பு முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளதை உதுமானிய பேரரசின் மருத்துவ வரலாறு கூறுகிறது.

 

1750 இல் உதுமானிய பேரரசின் தலைநகரில் பிரிட்டனின் தூதராக பணியாற்றிய எட்வர்ட் மாண்டேகுவின் மனைவி மேரி மாண்டேகு அவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு துருக்கி வந்தபோது அங்கே மக்கள் நோய் குறித்து எந்த அச்சமும் இல்லாமல் இருப்பதைக் கண்டார்.

 

இது குறித்து 1761 இல் இவர் எழுதிய கடிதத்தில் துருக்கியில் வயதான பெண்மணிகள் அம்மை நோய்க்கான தடுப்பூசிகள் போடுவதை முழுநேரத் தொழிலாகச் செய்கின்றனர். அது மக்களை அம்மை நோயிலிருந்து பெரிதும் தடுக்கிறது அதனால் என் பிள்ளைகளுக்கும் போட்டுக்கொண்டேன் என்று எழுதுகிறார்.


இந்த பெண்மணியின் கடிதம் மற்றும் தொடர் முயற்சியின் காரணமாக 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதுமானிய கிலாஃபத்திலிருந்து தான் ஐரோப்பாவிற்கு அம்மைநோய் தடுப்பூசிமுறை அறிமுகமாகியது. அதன் தொடர்ச்சிதான் எட்வர்ட் ஜென்னரின் கண்டுபிடிப்பாகும்.

 

 

திருக்குர்ஆனின் முப்பதாவது பகுதியான இப்பகுதியில் முப்பத்தியேழு அத்தியாயங்கள் உள்ளன. இதில் பல அத்தியாயங்கள் தொடக்கத்தில் வானம், நட்சத்திரம் பற்றிப் பேசுகின்றன. வானம், நட்சத்திரம் பற்றிய வானவியல் ஆய்வுகளுக்கு அவை ஆர்வமூட்டிக் கொண்டிருக்கின்றன.

 

எனினும், பிரபஞ்சத்தைப் படைத்தவன் யார்? என்பதைக் கண்டறிந்து, அவன் ஒருவனை இறைவனாக ஏற்று, அவனை மட்டும் வணங்குவது அதன் பிரதான குறிக்கோளாகத் திகழ்கின்றது. இதற்கான வழிகாட்டல் முழு மனித சமூகத்திற்கும் சொந்தமானதல்ல. மாறாக, யாருக்கு சிறப்பான அப்பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகின்றானோ அவருக்கு அதற்கான வழியைக் காண்பிக்கின்றான். இதையே,

 

هدى للمتقين

 

“அது, முத்தகீன்களுக்கு (மட்டும்) நேர் வழி காட்டும்.” என்று அல்-குர்ஆன் அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. (சூரத்துல் பகறா வசனம் 02)

 

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِر

 

“(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெற்றிட வேண்டும் என்பதற்காகவே நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை மிக எளிதாக்கி உள்ளோம். ஆகவே, நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?” (சூரத்துல் அல்-கமர் வசனம் 17)

 

இவ்வசமானது அல்-கமர் என்னும் அத்தியாயத்தில் 17,22,32,40 ஆகிய நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

இவ்வத்தியாயத்தின் 18 ஆம் வசனமானது, “ஆத்” சமூக மக்கள், அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறைத் தூதரான “ஹூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பொய்யாக்கிய காரணத்தால் அழிக்கப்பட்ட செய்தியைத் தாங்கி நிற்கின்றது.

 

ஆம் வசனம் 23 “ஸமூத்” சமூக மக்கள், அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறைத் தூதரான “ஸாலிஹ்” அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பொய்யாக்கிய காரணத்தால் அழிக்கப்பட்ட செய்தியைச் சொல்கின்றது.

 

ஆம் வசனம் 33 “லூத்” சமூக மக்கள், அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறைத் தூதரான “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பொய்யாக்கிய காரணத்தால் அழிக்கப்பட்ட செய்தியை விபரிக்கின்றது.

 

41 ஆம் வசனம், இறைத் தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் அழிவு பற்றிய தகவலைத் தாங்கி நிற்கின்றது.

 

இறைத் தூதர்களான நூஹ், ஹூத், ஸாலிஹ்,  லூத், மூஸா, இப்ராஹீம், ஈஸா அலைஹிமுஸ்ஸலாம் ஆகியோர் தத்தமது சமூக மக்களுக்குப் போதனை செய்த அதே கருத்தைத்தான் இறுதி இறைத் தூதரான ஸெய்யிதுனா முஹம்மத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களும் போதித்தார்கள்.

 

அல்-குர்ஆன் என்பது அல்லாஹ்வின் கூற்றே தவிர நபி நாயகத்தின் கூற்றல்ல

 

“நிச்சயமாக, இது (குர்ஆன்) மிக உயர்ந்த (மற்றும் புகழ்பெற்ற) தூதர் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வால் சொல்லப்பட்ட) கூற்றாகும்”.

 

“இது (இலக்கிய நிபுணத்துவத்துமிக்க) ஒரு கவிஞரின் வார்த்தை அல்ல. இன்னும், (இந்தக் குர்ஆன் யூகத்தால் வடிவமைக்கப்பட்ட திறமையான) ஒரு குறிகாரனின் வார்த்தையுமல்ல. இது பொய்யான சரித்திரக் கட்டுக் கதையுமல்ல”.

 

“(இந்தக் குர்ஆன்) அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டதாகும். மேலும், அவர் சில செய்திகளை எங்கள் மீது  இட்டுக்கட்டிக்  கூறியிருந்தால், நம்முடைய முழுப் பலத்தினாலும் அவரைக் கைப்பற்றியிருப்போம். பின்னர், நாம் அவரின் நாடி நரம்பை வெட்டியிருப்போம். (அப்போது) உங்களில் எவரும் அதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்த  முடியாது.” என்று திருக்குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது.

 

கடந்த கால சமூக மக்கள் அவர்களது இறைத் தூதர்களை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்த காரணத்தினால் அந்த நபிமார்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றிய பிறகு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையை அல்லாஹ் அனுப்பி வைத்து அவ்வநியாயக்காரர்களை முழுமையாக அழித்தொழித்ததைப்போன்று இறுதி இறைத்தூதரின் சமூக மக்கள் இன்று வரை அழித்தொழிக்கப்படவில்லை.

 

“இன்னும், அல்லாஹ்வே! இது (இஸ்லாம்) தான் உன்னிடம் இருந்துள்ள உண்மையா(ன மார்க்கமா)க இருப்பின், வானத்திலிருந்து எங்கள் மீது கல்மாரியை பொழியச்  செய்வாயாக! அல்லது நோவினை செய்யும்படியான வேதனையை எங்களுக்குக் கொண்டு வருவாயாக” (சூரத்துல் அன்ஃபால், வசனம் 32) என்று மக்காவில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் கூறிய பின்னும் அவர்களுக்குப் பொதுவான வேதனை வழங்கப்பட வில்லை. காரணம்,

 

“(நபியே யா ரசூலல்லாஹ்!) நீங்கள் அவர்களிடையே இருக்கும் போது அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வேதனை செய்வதாக இல்லை. இன்னும், அவர்கள் (உங்கள் பொருட்டால்) பிழை பொறுக்கத் தேடிக்கொண்டிருக்கும் போதும், அவர்களை அல்லாஹ் வேதனை செய்பவனாக இல்லை.” (சூரத்துல் அன்ஃபால், வசனம் 33) என்று அல்லாஹ் அறிவித்தான்.

 

அன்று முதல் இன்று வரை நிராகரிப்பாளர்களும், அநியாயக்காரர்களும் அவர்கள் மேற்கொள்கின்ற அட்டூழியங்களுக்காக முழுமையாக அழிக்கப்படாது உயிர் வாழ்கின்றார்கள் என்றால் அது, இறுதி இறைத் தூதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுக்காகத்தான் அவர்களை அல்லாஹ் விட்டு வைத்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

நபிமார்களை நிராகரித்தற்கான காரணம்

 

(இறைத் தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூக மக்கள் அவர்களைப் பார்த்து) “இவர் உங்களைப் போன்ற சாதாரண மனிதரேயன்றி வேறில்லை என்றனர்.” (சூரத்துல் முஃமினூன் வசனம் 21)

 

(இறைத் தூதர் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூக மக்கள் அவர்களைப் பார்த்து) “இவர் உங்களைப் போன்ற சாதாரண மனிதரேயன்றி வேறில்லை என்றனர்.” (சூரத்துல் முஃமினூன் வசனம் 33)

 

(இறைத் தூதர் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூக மக்கள் அவர்களைப் பார்த்து) “இவர் உங்களைப்போன்ற சாதாரண மனிதரேயன்றி வேறில்லை என்றனர்.” (சூரத்துஷ் ஷுஅராஃ வசனம் 154)

 

(இறைத் தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூக மக்கள் அவர்களைப் பார்த்து) “நீங்கள் நம்மைப்போன்ற (சாதாரண) மனிதரேயன்றி வேறில்லை என்றனர்.” (சூரத்துஷ் ஷுஅராஃ வசனம் 186)

 

எனவே, இறுதி இறைத் தூதரான கண்மணி நாயகம் ஸெய்யிதுனா முஹம்மத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சாதாரண மனிதர் என்று யாருமே கூற முற்படாதீர்கள். அவ்வாறு கூறுவோர் ஒன்றில் நிராகரிப்பாளராக இருப்பர். அல்லது நயவஞ்சகராக இருப்பர்.

 

இவ்வாறான நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து எமது எதிர் கால புதிய தலைமுறையினர் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாத்தின் அறிஞர்களை உருவாக்கும் திட்டம் வெற்றியடைய வேண்டும். அவ்வாறே, முக்கிய பொறுப்புக்களிலெல்லாம் அவர்கள் நியமனம் பெற வேண்டும். இஸ்லாம் பாட ஆசியர்களாக, அதிபர்களாக, முஃப்திகளாக, தலைவர்களாக, பட்டதாரிகளாக, இமாம்களாக என எல்லாத் துறைகளிலும் அவர்கள் பங்காற்ற வேண்டும்.  பறிக்கப்பட்ட எமது தலங்களை, எமது உரிமைகளை நாம் மீளப் பெற வேண்டும்.

 

குழந்தைகளுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுக்கும் முன்னர், கண்மணி நாயகத்தின் கண்ணியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ‘நபிகள் நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டால் கிடைக்கும்’ என்ற கொள்கை குழந்தைப் பருவத்தில் இருந்து தாய்ப்பால் ஊட்டப்படுவதுபோன்று கற்பிக்கப்பட வேண்டும்.

 

அல்லாஹ்வின் இறுதித் தூதராகத் தோன்றிய தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் அகிலங்களுக்கெல்லாம் அருளாக உள்ளார்கள். எனவே அவர்களின் அருள் பெறாமல் அல்லாஹ்வை அடைய முடியாதென்று அடித்தளமிடப்பட வேண்டும்.

 

அல்-குர்ஆனுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறை வேதங்கள் மனிதர்களால் சீரழிக்கப்பட்டது போன்று அல்-குர்ஆனையும் சீரழிக்கலாம் என்ற அவர்களின் சதித் திட்டம் தோல்வியுற்ற காரணத்தினால், திருக் குர்ஆனில் உள்ள அத்தியாயங்களில், வசனங்களில் மாற்றம் செய்வதற்குப் பதிலாக, திருக்குர்ஆனின் வசனங்களுக்கு பிழையான பொருள் கற்பித்து இஸ்லாமிய சமூகத்தைச் சீரழிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். அவ்வாறான திட்டங்களுக்குத் துணை போனவர்கள்தான் இந்த நயவஞ்சகர்கள்.

 

இவர்கள், திருக்குர்ஆனின் பல வசனங்களுக்குப் பிழையான பொருளை பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர் என்று பாட நூல்களில் பதியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயக் கடமையாகும். அவ்வாறானதொரு பணியை எமது இந்த திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்பு பூர்த்தி செய்து வைக்கும் என்று நாம் நம்புகின்றோம். அதற்கான முழு ஆற்றலையும் அல்லாஹ் எமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். ஆமீன் பிஜாஹிந் நபிய்யில் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்.

 

அஹ்லுஸ் ஸுன்னத் வல்-ஜமாத் அறிஞர் பெருமக்களே!

 

அண்ணல் நபி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் நல்லருளால் நாம் ஆரம்பித்திருக்கும் உயர்வான இப்பணியில், ஏதாவது குற்றம், குறைகள் உங்களது மேலான பார்வையில் தென்பட்டால் அதனை எமக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நாமும் சாதாரண மனிதர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

அத்துடன் இப்பணி முழுமை பெற்று நூல் வடிவம் பெறுவதற்காக உடலாலும் பொருளாலும் பேரதவி செய்த பேருபகாரிகளுக்கும் பெரும் மதிப்புக்குரிய ஆலிம் பெருந்தகைகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

யா அல்லாஹ்! அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் பொற் பாதங்களின் பொருட்டினால் இப்பணியை அங்கீகரிப்பதோடு இவ்வாறான பணிகளை மென்மேலும் புரிவதற்கு உடலிலும் உள்ளத்திலும் முழுமையான ஆரோக்கியத்தினை வழங்கிடுவாயாக!

 

யா அல்லாஹ்! உனது ஹபீபான அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் அருளினால் அவர்களின் சமூக மக்களான இஸ்லாமியர்களைப் பாதுகாப்பாயாக!. இஸ்லாமியர்களாக வாழும் பாக்கியத்தினை வழங்கிடுவாயாக!. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தினை சகலருக்கும் கொடுத்தருள் புரிவாயாக!. எமது இப்பணியை ஏற்றுக்கொண்டு வுழுவோடும் ஸலவாத்தோடும் ஷஹீதாக மரணிக்கும் நல்வாய்ப்பினை எமக்கும் எனது மனைவி மக்கள், உற்றார் உறவினருக்கும், மாணவ, மாணவிகளுக்கும், உனது மார்க்கப் பணிக்காகப் பணியாற்றும் சகல சகோதரர்களுக்கும் தந்தருள் புரிவாயாக!.

 

எங்கள் நாடான இலங்கைத் திரு நாட்டிலும் அவ்வாறே உலகம் அனைத்திலும் வாழும் சர்வ மத மக்களும் சகோதரர்களாக வாழ்ந்து அவரவர்களது நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்வதற்கு தெளஃபீக் செய்வாயாக!

 

பிற நாடுகளின் ஆதிக்கங்களில் இருந்தும் ஆட்கொல்லி வியாதிகள், போதை பொருள் பாவனை, பயங்கரவாதம், தீவிரவாதம், வஹாபியவாதம், பேரினவாதம் ஆகியவற்றில் இருந்தும் எம்மையும் எமது நாட்டையும் பாதுகாப்பாயாக! ஆமீன். பிஜாஹி ஸெய்யிதில் ஆலமீன் ஸல்லல்லாஹு  அலைஹி வஆலிஹி வஸல்லம்.

 

وإن تجد عيبا فسد الخللا   جل من لا له عيب وعلا

وما بها من خطإ ومن خلل    أذنت فى إصلاحه لمن فعل

لكن بشرط العلم والإنصاف     فإذا من أجمل الأوصاف

والله يهدي سبل السلام    سبحانه بحبله إعتصام

 

-ஆசிரியர்

குர் ஆன் மொழிபெயர்ப்பு தொடரும்.................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...