தூதுக்குத் தெரிந்தது தூதுவருக்குத் தெரியாதா?
மறைவான விடயங்களை முழு மனதுடன் எவர் ஏற்றுக்கொள்கிறாரோ அவரை ‘’முஃமினுல் கைப்’’ என்று சொல்லப்படும். மறைவான விடயங்கள் என்று எதற்குச் சொல்லப்படும்? என்று கேட்போமானால் இஸ்லாமிய மார்க்கத்தில் பேசப்படும் சகல பேச்சுக்களும் மறைவான விடயங்கள் என்றுதான் அதற்கு பதில் கூற நேரிடும்.
அல்லாஹ் ஒருவன் உள்ளான் எனத் தொடங்கி அவன் ஒருவனே வணங்கப்படவேண்டும். அவன் ஒருவனுக்கே சுயமான முழு அதிகாரமும் இருக்கிறது. நாளை மறுமையில் முழு நிலாவினைப் பார்ப்பது போன்று முஃமின்கள் அவனைப் பார்ப்பார்கள். அல்லாஹ்வைப் பார்ப்பது ஒன்றே முஃமினுடைய முக்கிய குறிக்கோளாகும். அதுவே அவன் பெறப்போகின்ற உச்சக்கட்ட சன்மானமாக இருக்கப்போகிறது. அதுபோன்ற அம்சங்களை மறைவான விடயங்களுக்கு உதாரணம் சொல்லலாம்.
அல்லாஹ்வில் தொடங்கி அல்லாஹ்வில் முடிகின்ற மறைவானவற்றை விசுவாசித்து அதற்கான ஆயத்தங்களில் தனது நேர காலங்களைக் கழித்துக்கொண்டிருக்கின்றதொரு உண்மையான முஃமின் இவ்விரண்டுக்கும் இடையே சொல்லிலடங்காத இன்னும் எத்தனையோ மறைவானவற்றை முழு மனதுடன் நம்பிக்கை கொண்டவனாகவும் அவன் இருக்கின்றான். இப்படிப்பட்ட ஒருவனை “முஃமினுல் கைப்’’ மறைவான ஞானங்களை நம்பிக்கைகொண்டவன். என்று அல்குர்ஆன் அறிவித்துக் கொண்டிருக்கிறது.
மேற் கூறியவாறு மறைவான ஞானங்கள் இருப்பதாக உங்களுக்கு சொல்லித் தந்தது யார்? என்று கேட்டால் அல்குர்ஆனையும் அல்ஹதீதையும் இதற்கு ஆதாரமாக நாம் கண்பிக்கின்றோம். அதாவது அல்குர்ஆனிலும் அல்ஹதீதிலும் மறைவான ஞானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று கூறுகின்றோம்.
அல்லாஹ் மறைவான ஞானங்களை அறிந்தவன் மட்டுமல்ல. அவை அனைத்தையும் உருவாக்கியவனும் அவன் ஒருவன்தான். அவ்வாறு அவனால் உருவாக்கப்பட்ட மெய்ஞ்ஞானங்களை வெளிப்படுத்தி வைத்து அவன் ஒருவனே வணங்கப்பட வேண்டுமென்ற அவனது ஆசையினை அல்குர்ஆன் அல்ஹதீஸ் என்ற வஸீலாவினூடாக மனிதர்களுக்கு வெளிப்படுத்தி வைத்தான்.
அல்குர்ஆன் எவ்வாறு வஹியாக இருக்கின்றதோ அவ்வாறே அல்ஹதீதும் வஹியாக இருக்கிறது. வஹியினை ரிசாலத் என்றும் சொல்லப்படும்.
வஹி அல்லது ரிசாலத் என்ற வார்த்தைக்கு தூது என்று கருத்துக் கூறுகின்றோம். இதனடிப்படையில் ரிசாலத் என்ற தூது வழங்கப்பட்ட ஒருவரை ரசூலுன் - தூதுவர் என அழைகின்றோம்.
படைப்புக்களைப் படைத்த பின்னர் என்னென்ன விடயங்கள் நிகழ வேண்டுமோ அவை அனைத்தையும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் என்று சொல்லப்படுகின்ற அவனது தூதில் அவன் பதிவு செய்துவிட்டான். என்றால் தூதுக்குத் தெரிந்த தகவல் தூதுவருக்குத் தெரியாமல் இருக்குமா? என்ற வினா எழுகிறது.
மறைவானவற்றை விசுவாசித்த மனிதர்களை ‘’முஃமினுல் கைப்’’ என்று அறிவித்த அல்லாஹ், விசேட தூதுவர்களை ‘’முழ்ஹிருல் கைப்’’ மறைவானவற்றை வெளிப்படுத்தி வைப்பவர் என்றும் அறிவித்தான். எனவே ‘’முஃமினுல் கைப்’’ ஆக இருக்கும் ஒருவர் ‘’முழ்ஹிருல் கைப்’’ ஆக தூதுவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஈமான் கொள்ளவேண்டும். அதாவது தூதுவருக்கு மறைவான ஞானம் உண்டு என்ற நம்பிக்கை இருக்கும் ஒருவரே உண்மையான ஈமான் உள்ள ஒருவராக கருதப்படுவார்.
இதுவே உண்மையான அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையுமாகும்.
.............தொடரும்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக