சனி, 15 ஜூன், 2019

பிரபஞ்சங்கள் உருவானது எவ்வாறு?ரூஹ்,..குன்..


பிரபஞ்சங்கள் உருவானது எவ்வாறு?

அல்குர்ஆனும் அல்ஹதீதும் அல்லாஹ்வின் தாத் தொடர்பில் சந்திப்பதை தவிர்த்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கும் அதே நேரம் படைப்புக்கள் பற்றி  சிந்திக்குமாறு தூண்டுகின்றன. வானம், பூமி பற்றிய சிந்தனையாளர்களை போற்றிப் பெருமை பாராட்டுகின்றன. அந்தவகையில் நாமும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
அல்லாஹ் நூர் என்று அறிந்துள்ளோம். நூர் என்ற பதத்திற்குப் பல பொருள்கள் இருக்கின்றன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் எந்த இடத்திற்கு என்ன பொருள் கூறினார்களோ அதையே நாமும் கூறுவோம். அல்லாஹ் நூராகும் என்ற அடிப்படையில் அவனது ஸிஃபாத்துக்களும் நூராகவே இருக்கவேண்டும். அதனால்தான்போலும் அவனது கலாமான அல் குர்ஆனை அவன் நூர் என்றான். அவன் மார்க்கமான இஸ்லாம் நூராகும். ஹிதாயத் என்பதும் நூராகும்.
அல்லாஹ்வின் தாத் பற்றித் தேடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருப்பதனால் அவன் படைப்பு பற்றி சிந்திக்க முடியும். அவ்வாறு சிந்திப்பது வணக்கமாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் முதல் படைப்பான தண்ணீர் எதனால் படைக்கப்பட்டதாக இருக்கும் என்று சிந்திக்கின்றோம்?.
நூரான அல்லாஹ்வின் ஆட்சிபீடமான அர்ஷ் மற்றும் குர்ஷி, லவ்ஹ், கலம் என்பனவும் நூரினால் ஆனதென்று இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் அஸ்ராருல் கவ்ன் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
அர்ஷினை சுமந்துகொண்டிருக்கும் அமரர்கள் முதல் அகிலங்களைப் பராமரித்து நிர்வகிக்கும் நிர்வாகிகள் நூராகும்.
மனிதனுக்கு முந்திய இனமான ஜின்னினம் நார் நெருப்பினால் படைக்கப்பட்டிருக்கின்றது. மனிதன் மண்ணினாலும் படைக்கப்பட்டவானாக இருக்கின்றான். நூருன் என்ற சொல்லுக்கும் நாருன் என்ற சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்து வித்தியாசமாக இருக்கிறது. எனவே மண்ணினால் உருவான மனிதன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவன் பாதையில் செல்லும்போது நூராகவும் அப்பாதையில் இருந்து விலகிச்செல்லும்போது அவன் நாராகவும் ஆகின்றான்.
ரூஹ் என்றால் என்ன?
ரூஹ் என்ற வார்த்தை அல் குர்ஆனில் பல அர்த்தங்களில் பிரயோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஹழ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ரூஹ் என்று (சூரத்துஷ் ஷுஅரா வசனம் 193, 194)  சொல்வது போன்று குர்ஆன், இஸ்லாத்திற்கும் ரூஹ் என்று சொல்லப்படும் என்பதற்கு இதே அத்தியாயத்தின் 53ம் வசனத்தினை பெருமக்கள் ஆதாரம் காண்பிக்கின்றனர்.
மனிதனின் சரீரத்துடன் சேர்ந்துள்ள ரூஹின் யதார்த்தமான நிலையினை அல்லாஹ் ஒருவனே அறிவான். எனினும் அது நூரினால் ஆனதென்று அறிவிப்போரும் உண்டு.
அல்லாஹ்வுக்கும் அமர்களுக்கும் அல்லது அர்ஷுக்கும் அமரர்களுக்கும் இடையில் பல திரைகள் இருக்கின்றன. அந்த திரைகளில் சில  நூராகும்.
சூரியன், சந்திரன், நட்சத்திரம் என்பன நூராகும்.       
"குன் என்ற சொல்லின் கோலம்.
ஆக மொத்தத்தில் தண்ணீர முதல், துவக்கம் பெறுகின்ற அல்லாஹ்வின் படைப்புக்கள் யாவும் அவனின் குன் = ஆகு என்ற உத்தரவினால் ஆனவைகளாக இருக்கின்றன. அல்லாஹ்வும் அவனது கலாமும் நூராக இருகின்றதென்ற காரணத்திற்காக அவனது குன் என்ற உத்தரவும் அவ்வுத்தரவில் ஆனவைகளும் நூராக இருக்கவேண்டும். எனவே அல்லாஹ்வின் படைப்புக்களில் எந்தப் படைப்பு என்ன கோலத்தில் காணப்பட்டாலும் அது யதார்த்ததில் குன் என்ற நூரினால் வெளிவந்த கோலமாகவே  இருக்கும். அந்தக் கோலங்களில் முதல் கோலம் முஹம்மதுன் என்ற கோலமாகும்.

வெள்ளி, 14 ஜூன், 2019

நபியே நாயகமே! உங்கள் திக்ரை நாம் எவ்வாறு உயர்த்தியுள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


நபியே நாயகமே! உங்கள் திக்ரை நாம் எவ்வாறு உயர்த்தியுள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனிதனும் ஜின்னும் அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்காகவே  படைக்கப்பட்டிருகின்றன என்கின்றான் அல்லாஹ். மனிதனின்  சகல நற்கருமங்களும் வணக்கமாகும். வணக்கம் என்பது திக்ராகும்.
வானம் பூமிகளில் உள்ளவைகள் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன.  அவனை திக்ர் செய்யாத எதுவுமேயில்லை  என்றும் அல்லாஹ்  சொன்னான்.  தஸ்பீஹ் என்பதும் திக்ராகும். அல்லாஹ் திக்ர் செய்யப்படவேண்டும்  என்பதற்க்காகவே  அவன் பிரபஞ்சங்களை வெளிப்படுத்தியும்  வைத்தான்.
என்னை திக்ர் செய்பவர்களை நானும் திக்ர் செய்கின்றேன் என்றும் அவன் சொன்னான்.
மனிதனின் கோலம் நபிய்யுல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் ஆரம்பிக்கப்பட்டாலும் அவனது தக்தீர் வானம் பூமிகளை விட முன்னிலையில் இருக்கிறது.
தக்தீரானது தண்ணீர், அர்ஷ் போன்ற படைப்புக்களைப் படைத்த பின்னர் எழுதப்பட்டதாக இருப்பினும்கூட  தண்ணீரைப் படைக்கும் முன்பும் அந்த தக்தீர் அல்லாஹ்வுக்குத் தெரிந்தே இருந்தது. அவற்றினை அவன் பார்த்தும் இருக்கின்றான். அவற்றில் அவனை அதிகம் திக்ர் செய்யும் படைப்பு எதுவாக இருக்கும் என்றும் அவன் அறிந்துகொண்டான்.  அதனை அவன் பார்த்தான்.
அவனை அதிகம் திக்ர் செய்யும் ஒன்றாக அந்த தக்தீரில் எந்தப் படைப்பினை அவன் பார்த்தானோ அதனை அவனது படைப்புக்களில் விசேட படைப்பாகப் பார்த்தான்.  தன்னைப்பற்றி சொல்வதற்கு அசலாக அதனை அமைத்துக் கொண்டான். தன்னுடைய திக்ருடன் அதன் திக்ரையும் அவன் இணைத்துக் கொண்டான்.  அதுவே அல்லாஹ்வின் திக்ராகும். அதுதான் மிகப்பெரிய திக்ராகும். அதுதான் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற திக்ராகும். இந்த திக்ர் பற்றிக் கூறும்போது, “நபியே நாயகமே உங்களின் திக்ரை நாம் உயர்த்தியுள்ளோம். என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களிடம் வருகை தந்த வானவத் தூதுவர் ஹழ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்களின் திக்ரை அல்லாஹ் எவ்வாறு உயர்த்தியுள்ளான் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று எனது ரப்பும் உங்கள் ரப்பும் உங்களிடம் கேட்கின்றான் என்று சொன்னார்கள். அதற்கு, அல்லாஹ்தான் மிகவும் அறிந்தவன் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் பதில் கூறியபோது  நான் திக்ர் செய்யப்பட்டால் நீங்களும் திக்ர் செய்யப்படுகின்றீர்கள் என்று அவ் அமரர் பதில் கூறினார்.
வானம், பூமிகளில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கிறது என்ற அல்லாஹ்வின் அறிக்கையின் அடிப்படையில் படைப்புக்களைப் படைத்த பின்னர் அப்படைப்புக்களில் அவனை திக்ர் செய்த ஒவ்வொன்றும் அவனது திக்ருடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களையும் சேர்த்து திக்ர் செய்திருக்கவேண்டும் என்பது இதில் இருந்து புரிகிறது. அப்படியானால் அல்லாஹ்வின் முதல் படைப்பு என்று சொல்லப்படுகின்ற தண்ணீர் அல்லாஹ்வை திக்ர் செய்திருக்க வேண்டும். அப்படி அது திக்ர் செய்திருக்குமாக இருந்தால்  அல்லாஹ் என்ற அந்த திக்ருடன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் திக்ரையும்  அந்த தண்ணீர் திக்ர் செய்து இருக்கவேண்டும். இதனடிப்படையில் சல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தண்ணீருக்கு முந்தியவர்கள் என்பது புரிகிறது.
ஏழு வானங்களும் பூமிகளும் அவற்றில் உள்ளவைகளும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன. அவனை தஸ்பீஹ் செய்யாத எந்தவொன்றும் இல்லை. ஆனாலும் கூட அவற்றின் தஸ்பீஹுகளை நீங்கள் விளங்கிக்கொள்ளமாட்டீர்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலின் அடிப்படையில் இதனை உங்களில் எத்தனைபேர் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களோ தெரியவில்லை.
தொடரும்........

கட்டுரைகள்

“வஹ்ஹாபிகள்” இந்தக் காலத்தின் “க்வாரிஜ்கள்”

  இப்னு அப்தில் வஹ்ஹாபும் இப்னு தைமிய்யாவும்   இப்னு தைமிய்யா என்ற தனி நபரால் விதைக்கப்பட்ட பொய்யான, பிழையான, மார்க்கத்துக்கு ...